கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படை (NCC) முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர்.  முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பள்ளியின் என்சிசி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளதாக தெரியவந்தது.



இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உட்பட 11 பேரை கிருஷ்ணகிரி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவராமன் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளது. சிவராமன் பள்ளியில் படித்த காலத்தில் என்சிசி மாணவர் ஆக இருந்துள்ளார். அப்போது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தன்னை என்சிசி அலுவலராக தனியார் பள்ளி, கல்லூரிகளில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது வெளியாகி உள்ளது. குறிப்பாக புகாருக்கு உள்ளான தனியார் பள்ளி என்சிசி பயிற்சி அளிக்க மாணவி ஒருவருக்கு தலா 1500 பணம் வசூல் செய்துள்ளார். இந்த பணத்தை கொண்டு மாணவிகளுக்கு பதக்கங்கள் கேடயங்கள் தயார் செய்து அதில் என்சிசி ஸ்டிக்கர்களை போலியாக ஒட்டி வழங்கி உள்ளார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் உட்பட 11 பேர் கைது செய்துள்ளனர். போலீசாரின் பிடியிலிருந்து சிவராமன் தப்ப முயன்ற போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது.


கைதான சிவராமன் போலீஸ் பிடியிலிருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்து கால் முறிந்தது அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிவராமன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில கல்வி நிறுவனங்களில் போலியாக முகாம் நடத்தி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளன. இது குறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.  



இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிவராமனுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் விஷம் அருந்தி உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். காவல்துறையினர் தன்னை கைது செய்யப்போவதாக அறிந்து கடந்த 16,18 ஆம் தேதிகளில் இரண்டு எலி பேஸ்டுகளை உட்கொண்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நேற்று கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி சங்கர், டி.எஸ்.பி பிரித்திவி ராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5:30 மணிக்கு சிவராமன் சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் சிவராமன் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு எலி பேஸ்ட் உட்கொண்டு பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)