அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை இந்து மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசியல் லாபத்திற்காக பாஜக அரசு திறப்பதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., விமர்சித்துள்ளார். 


சேலத்தில்  மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இளைஞரணி மாநாட்டை கனிமொழி எம்.பி கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டிற்காக சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் திமுகவின் முன்னணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர். 


இந்த இளைஞரணி மாநாட்டில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., “இங்கு பேசியவர்கள் ‘நாம் பெரியாரின் பிள்ளைகள். அதனால் கொள்கைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்’ என சொன்னார்கள். ஆனால் நாளை வட இந்தியாவில் ஒரு கோயிலை திறக்க இருக்கிறார்கள். அந்த கோயில் திறப்பு பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை. ஏனென்றால், குடியரசுத்தலைவரை அழைக்கவில்லை என கேட்கப் போவதில்லை. நாளை பிரதமர் கோயிலை திறக்க இருப்பது பற்றியும் எந்த பிரச்சினையும் இல்லை. 


எனக்கு கோயிலைப் பற்றி பெரிதாக தெரியாத நிலையில் இங்கு அமர்ந்திருக்கும் அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்கிறேன். முழுதாக கட்டி முடிக்காமல் கோயிலை திறக்கலாமா? (இதற்கு இல்லை என அமைச்சர் சேகர் பாபு பதிலளித்தார்). இல்லை அல்லவா! . ஆனால் இன்றைக்கு இருக்கும் பாஜக அரசு, ‘நாங்கள் இந்து மதம், சனாதனம், கோயில் எல்லாம் காப்பாற்றுகிறோம். அதனால் எல்லா கோயில்களையும் எங்களிடம் கொடுத்து விடுங்கள்’ என சொல்கிறார்கள்.  


எங்க அண்ணி (துர்கா ஸ்டாலின்) கூட இருக்காங்க. அவர்களுக்கும் மனசு கஷ்டமா தான் இருக்கும். ஏனென்றால் கட்டி முடிக்காத கோயிலை திறக்கக்கூடாது என்கிறது இந்து மதம். அதை அரசியலாக்கி, உங்கள் அரசியல் லாபத்திற்காக, இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல், உங்கள் ஆட்களே கோயிலுக்கு வரமாட்டேன் என சொல்லக்கூடிய அளவுக்கு அரசியல் விளையாட்டில் நாளை அந்த கோயிலை திறக்க போகிறார்கள். இதற்கு அரை நாள் விடுமுறை வேறு விடப்பட்டுள்ளது.


தனியார் அமைப்பு திறக்கக்கூடிய கோயிலுக்கு ஸ்பெஷல் ரயில்கள் எல்லாம் விடுகிறார்கள். இதையெல்லாம் நாம் கேள்வி கேட்கக்கூடாது. கேள்விக் கேட்டால் நமக்கு ICE வைப்பார்கள். ICE என்றால் Income tax, CBI, ED ஆகிய 3 துறையும் நம்மை தேடி வரும். இதெற்கெல்லாம் பயப்படுகிறவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. நீங்கள் என்ன செய்தாலும் உங்களையும், உங்கள் கருத்துகளையும் எதிர்ப்போம். எதிர்த்து நின்று மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியை மாற்றிக் காட்டுவோம்” என தெரிவித்துள்ளார்.