சேலம் விமான நிலையக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் குழுவின் தலைவரும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விமான நிலைய இயக்குநர் ரமேஷ், தொழில் முனைவோர், ஓமலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சங்கீதா, காவல்துறையினர் மற்றும் விமான நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சேலம் விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 


கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், "சேலம் விமான நிலையத்தில் மத்திய அரசின் உதான் திட்டத்தில் பெங்களூர், கொச்சி மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமான சேவை அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. சேலம் - சென்னை விமான சேவை அக்டோபர் 29 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் சேலத்தில் இருந்து 2167 பேர் விமான பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானம் வாயிலாக சேலத்திற்கு 2436 பேர் வந்துள்ளனர். 130 முறை விமான சேவை நடைபெற்றுள்ளது. சேலம் - சென்னை விமான சேவை பெரும்பாலும் முழுமையாக பயணிகளுடன் சென்று வருகிறது. அதிக அளவு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சேலத்தில் இருந்து திருப்பதி மற்றும் சீரடிக்கு நேரடி விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நாள்தோறும் 5 விமானங்கள் வந்து செல்லும் நிலையில், இரவு நேரங்களில் விமானங்களை நிறுத்தி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 1800 மீட்டர் விமான நிலைய ஒடுபாதை தற்போது உள்ளது. இதனை 3 ஆயிரம் மீட்டராக உயர்த்திடும் வகையில் சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமானநிலைய விரிவாக்கம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் கலைஞரின் நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சேலத்தில் இருந்து முதல்முறையாக விமானப் பயணம் மேற்கொள்ளும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு என்னுடைய சொந்த செலவில் விமான டிக்கெட்டுகளை வழங்க உள்ளேன் என்று கூறினார்.



மேலும் கூட்டத்தில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக இருந்த சேலம் மாவட்டத்தை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சேலம் ஊருக்கு ஆலை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் ரயில்வே கோட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கியவர் முன்னாள் முதல்வர் கலைஞர். எனவே அவரது பெயரை சேலம் விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறையிடம் வழங்கப்பட உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர் இரவு நேரங்களில் விமானம் தரையிறங்கும் வகையில் ஏற்படும் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான நிலங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. விவசாயிகள் தானாக முன்வந்து தங்களது நிலங்களை கொடுத்து வருகின்றனர். விரிவாக்க பணி முடிவடைந்தால் சரக்கு விமானங்கள் மற்றும் தனியார் விமானங்களை சேலம் விமான நிலையத்தின் சேவை விரிவாக்கம் செய்யப்படும். எனவே கூடிய விரைவில் விரிவாக்க பணி நடைபெற்ற மேலும் பல விமான போக்குவரத்து சேவைக்கு வழிவகை செய்யப்படும் என்று கூறினார்.