தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், மாரண்டஹள்ளி, பாலக்காடு, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள் பாலக்கோடு, ஓசூர், நாமக்கல், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

 


 

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையல், தற்போது சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த மாதமாக வரத்து குறைவால், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

 


 

ஆனால் தற்போது விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து சின்ன வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், தருமபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை, கிலோ 55 ரூபாயிலிருந்து சரிந்து 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


மேலும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்ளும  செய்யும் வியாபாரிகள் கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கே கேட்கின்றனர். இதனால் விவசாயிகள் சாலையில் வெங்காயங்களை குவித்து வைத்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை சரிவால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.