தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஆத்துமேடு பகுதியில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி அங்கு இருந்து போலி மது பாட்டில்கள் தயாரித்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு  ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து எஸ்பி சி.கலைச்செல்வன் உத்தரவை தொடர்ந்து தருமபுரி மதுவிலக்கு அமல் பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜாசோமசுந்தரம் தலைமையில் காவல் ஆய்வாளர் பாரதி மோகன், உதவி ஆய்வாளர் விஜய சங்கர் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் மாரண்டஅள்ளி காவல் துறையினர்  இணைந்து மாரண்டஹள்ளி பகுதியில் சோதனை நடத்தினர்.

 



 

அப்பொழுது மாரண்டஹள்ளி அருகே உள்ள ஆத்துமேடு கிராமத்தில், அகரம் ரோட்டில் உள்ள போயர் கொட்டாய் பகுதியில் பழச்சாறு மற்றும் மது அல்லாத ஒயின் தயாரிப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்று விட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து, போலி மதுபான தொழிற்சாலை நடத்துவது தெரியவந்தது. மேலும்  கள்ளச்சாராயம் தயாரித்து அதற்கு கலர் கலந்து அதனை மது பாட்டில்களில் நிரப்பி போலி மதுபான கம்பெனி ஸ்டிக்கர்கள் ஒட்டி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுவதுவது தெரியவந்தது.

 

இதனையடுத்து அந்த போலி மதுபான தொழிற்சாலையை நடத்தி வந்த சுந்தரராஜன்(45), இவரது மனைவி முத்துமணி (37) மற்றும் வளர்ப்பு மகன் ஷேக் பாண்டியன் (25) ஆகிய 3 பேரையும் மதுவிலக்கு அமல்பிரிவினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம் மற்றும் உபகரணங்கள், கள்ள சாராயம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், போலி மது பாட்டில்கள் மற்றும் 5 பேரல்கள், 3000 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலி மதுபாட்டில்கள் மற்றும் 3000 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல் கீழே ஊற்றி அழித்தனர்.

 



 

தொடர்ந்து போலி மதுபாட்டில் கம்பனி நடத்தி வந்தது குறித்து, தருமபுரி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இங்கிருந்து எந்தெந்த பகுதிக்கு போலி மதுபாட்டில்கள் வினகயோகம், செய்யப்படுகிறது, இதுபோன்று வேறெங்காவது போலி மதுபாட்டில்கள் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்த விவரங்களை மதுவிலக்க் அமல்பிரிவு காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர். மேலும் மாரண்டஅள்ளி பகுதியில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி வந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.