சேலம் மாவட்டத்தில் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பண்டிகையை முன்னிட்டு 09.08.2023 புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக, 02.09.2023 சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் மிகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். ஆடி மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் ஆடிப் பண்டிகை விழா மிகச் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள அனைத்து மாரியம்மன் கோவிலுக்கும் பெரிய மாரியம்மனாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் ஒன்றாம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் விழா தொடக்கமான பூச்சாட்டு நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை விமர்சியாக நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு. பின்னர் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பத்து டன் மலர்களைக் கொண்டு பூச்சாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று கோட்டை மாரியம்மனுக்கு தாங்கள் கொண்டு வந்த மலர்களால் அபிஷேகம் செய்தனர். இதன்பின் வருகின்ற 07 ஆம் தேதி இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் 09, 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் விழாவில் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. தொடர்ந்து 15 ஆம் தேதி அன்று பால்குட ஊர்வலம் மற்றும் மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும்.



இந்த மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இதேபோன்று அம்மாப்பேட்டை, குகை, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் திருக்கோவில்களிலும் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 22 நாட்கள் நடைபெறும் ஆடி பண்டிகை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆடி இரண்டாம் வாரம் கம்பளி நடுவது, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் பசம்பாவிதங்களை தடுக்க கோவில்களில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 1000 கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் ஆடி 18 அன்று பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். காவிரி ஆற்றில் குளிப்பதற்காக பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நீர் திறப்பு குறைவாக உள்ளதால் பொதுமக்களுக்கு இதுவரை எந்தவித அறிவிப்பும் அரசு சார்பில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.