தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.  இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்து, அருவிகளில் குளித்தும், பரிசல் பயணம் செய்து அருவிகளின் அழகை கண்டு ரசித்து, சுவையான மீன் உணவை உண்டு மகிழ்கின்றனர். மேலும் ஒகேனக்கல் தமிழகத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் அருகிலுள்ள மாவட்டங்களில் தெலுங்கு கன்னடம் தமிழ் பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். யுகாதி பண்டிகை அதிக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 



 

இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் விடுமுறையை ஒட்டி  ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ், காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர் மற்றும்  நண்பர்களுடன் பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று  அருவியில் அழகை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்றவாறு அருவியின் அழகை கண்டு ரசித்தனர். தொடர்ந்து  முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்தனர். யுகாதி பண்டிகை மற்றும் ஞாயிறு விடுமுறை கொண்டாட ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால்,  கடைகளில் உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

 



 

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், மெயினருவி, சினியருவி மற்றும் பரிசல் துறை, உணவுக்கூடம் உள்ளிட்ட எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மேலும்  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், காவல் துறையினர், வருவாய் துறையினர் ஆலம்பாடி, மணல்திட்டு மெயின் அருவி, பரிசில் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். மேலும் கடந்த வாரம் பரிசலில் பாதுகாப்பு உடை அணியாமல், சுற்றுலா பயணிகளை பரிசல் ஓட்டிகள் அழைத்து சென்றது கண்டிப்பிடிக்கப்பட்டதால், இன்று பரிசல் துறையில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் திவீர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து யுகாதி பண்டிகை மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால், பரிசல் ஓட்டிகள், ஆயில் மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட சுற்றுலாவை நம்பியுள்ள  தொழிலிளர்கள் மிகுந்த மகிழ்ச்சியைந்தனர்.