தருமபுரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் வலி நிவாரண மருந்து ஊசிகளை பயன்படுத்தி, இளைஞர் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக தருமபுரி மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  போதைப் பொருள் தடுப்பு ஆய்வாளர் சந்திரா மேரி தலைமையிலான குழுவினரும், டிஎஸ்பி வினோத் தலையில் காவல் துறையினரும் இணைந்து நல்லம்பள்ளி வட்டம் மிட்டாதின்னஅள்ளி அடுத்த மயில்கொட்டாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியைச் சேர்ந்த வஜ்ரவேல் (47) என்பவரை தேடி வரும் இளைஞர்கள் போதை ஊசி செலுத்திக் கொண்டு செல்வதாக ஆய்வில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் தொடர் விசாரணையில் தருமபுரி நகரில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் இருந்து குறிப்பிட்ட மருந்தை வாங்கி இளைஞர்களுக்கு வஜ்ரவேல் செலுத்தி வருவதாகவும், போதை தேவைக்காக இளைஞர்கள் இந்த ஊசியை செலுத்திக் கொள்ள வஜ்ரவேலுவை நாடி அதிக அளவில் வருவதாகவும் தெரிய வந்தது. 

 



 

எனவே, மெடிக்கல் கடை உரிமையாளர் சோமசுந்தரத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தருமபுரியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், சாமிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருடன் இணைந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து இவ்வகை மருந்துகளை வாங்கி சோமசுந்தரத்தின் மெடிக்கல் கடைக்கு அனுப்புவதாக தெரிய வந்தது. எனவே, அவர்கள் 4 பேரையும் அதியமான்கோட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.  இதனை தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு ஆய்வாளர் சந்திரா மேரி இதுகுறித்து கூறும்போது, ‘புற்றுநோய் உள்ளிட்ட நோயாளிகளுக்கு வலி நிவாரணம் தர  ‘ட்ரெமடால்’ எனும் மருந்து ஊசியாக செலுத்தப்படும். இந்த ஊசி மூலம் வலி குறைந்து உளவியல் ரீதியாக நம்பிக்கை ஏற்படும். இந்தவகை மருந்து தருமபுரி நகரைச் சுற்றி உள்ள பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்தது. குறிப்பாக, போதைக்கு மாற்றாக இந்த மருந்து இளைஞர்களால் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. இந்த மருந்தின் தொடர் பயன்பாடு மாரடைப்பு வந்து உயிருக்கே ஆபத்தாக முடியவும் கூடும்.

 



 

மதுவை விட குறைந்த விலையில் இந்த மருந்துகள் கிடைப்பதாலும், மது அருந்தினால் ஏற்படும் வாடை போன்றவை இல்லாமல் போதை போன்ற மனநிலையை நுகர முடிகிறது என்பதாலும் இளைஞர்கள் இவ்வகை ஊசிக்கு அடிமையாகி வருவது தெரிகிறது. இந்த விபரீத கலாச்சாரத்தில் இருந்து இளையோரை மீட்கும் வகையில் காவல் துறையுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்..