தருமபுரி: “நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதி,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டாவிற்கு வாக்களிக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது” என முன்னாள் ஆளுநர் சதாசிவம் பேசினார்.

 

தருமபுரி மாவட்டம் அரூரில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை முழு உருவ சிலைதிறப்பு விழா, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்க தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களின் முளைப்பாரி ஊர்வலத்தை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் யு‌.தனியரசு தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் கேரள சண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து முன்னாள் கேரள மாநில ஆளுநர் சதாசிவம், தியாகி தீரன் சின்னமலை திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.



 

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை ஒரு சிறந்த புரட்சியாளர் மற்றும் போராளியாக விளங்கினார். அவர் புகழை நிலை நாட்டும் வகையில் மத்திய அரசு தபால் தலையை வெளியிட்டுள்ளது. தமிழக அரசும் மணிமண்டபம், நினைவு இல்லங்கள் அமைத்து பராமரித்து வருகிறது. தமிழகத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் அவ்வப்போது போர் ஏற்படும். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் அனைத்தும் அந்த மக்கள் தலையில் விழும். ஆனால் கொங்கு நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் இந்த முறைக்கு மாற்றாக செயல்பட்டனர்.



 

நான் பிவிசி முடித்த பிறகு மருத்துவம் படிக்கவே விருப்பப்பட்டேன். கர்நாடக மாநிலத்தில் மருத்துவம் படிப்பதற்கு அப்போது எனது உறவினர் ஒருவர் 25000 பணம் கட்டி மருத்துவ படிப்பில் சேர்ந்து இருந்தார். நானும் மருத்துவம் படிக்க விருப்பப்பட்டதால் எனது உறவினர் 25 ஆயிரம் பணம் எடுத்து வர வேண்டும் என தெரிவித்தார். எனது தந்தையிடம் அந்த அளவிற்கு பணம் இல்லாததால் மருத்துவம் சேர முடியாமல் போனது. நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதி குறித்த வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அறிந்து அப்பொழுது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டி எனக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்காக பூங்கொத்தோடு எனது இல்லத்திற்கு வந்திருந்தார்கள். ஆனால் நான் சட்டத்தின்படியே செய்தேன் இதை பாராட்ட வேண்டிய தேவையில்லை சென்று வாருங்கள் என வழியனுப்பி வைத்து விட்டேன். இதேபோன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டாவிற்கு வாக்களிக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் அனைவரும் போற்ற வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் எம்எல்ஏ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.