சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் 75 ஆம் ஆண்டு பவள விழா நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மாநில சம்மேளன தலைவருமான தனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, டெல்லி அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் தலைவர் மதன், தெலுங்கானா மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் துனைதலைவர் ஜவகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பவள விழா கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து, அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, தமிழகத்தில் தற்போது உள்ள அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், குறிப்பாக டீசல் ஐந்து ரூபாய் குறைப்பதாக கூறியதை செயல்படாமல் உள்ளார். 



அதேபோல், சுங்கச்சாவடிகளை அகற்றுவதாகவும் வாக்குறுதி அளித்து இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. 11 மாநிலங்களில் டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த ஐந்து ரூபாயை குறைக்காமல் தற்போது உள்ள அரசு இருப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் தமிழகத்தில் செயல்படாமல் உள்ள 35 சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக அறிவித்த நிலையில், இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. லாரிகளுக்கு ஒட்டக்கூடிய ஒளிரும் பட்டையை பல்வேறு மாநிலங்களில் 11 நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஐந்து நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு ஒளிரும் பட்டையை ஓட்டுவதற்கு நிர்பந்தப்படுத்துவதை கண்டிப்பதாகவும் தெரிவித்தார். பல ஆண்டுகளாக ஒவ்வொரு மாநில எல்லைகளிலும் உள்ள செக் போஸ்ட்களில் அதிகாரிகள் லாரிகளிடம் வேறு மாநிலத்திற்கு செல்வதற்கும், வேறு மாநிலத்திலிருந்து சொந்த மாநிலத்துக்கு வருவதற்கும் லஞ்சம் கேட்கின்றனர். ஆயிரம் ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை லஞ்சம் பெறுவது கண்டிக்கத்தக்கது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது என்றார்.



அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில் எதற்காக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்தார். எனவே வருகின்ற டிசம்பர் 25 ஆம் தேதி முதல் மாநில எல்லைகளில் உள்ள செக் போஸ்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பணம் தர மாட்டோம். மீறி வற்புறுத்தினால் அங்கேயே வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் போவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரியை கட்டச் சொல்லி வற்புறுத்துவதை குறைக்க வேண்டும், உள்ளிட்ட இந்திய முழுவதும் உள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரைவில் நடைபெற உள்ள அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.