தருமபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது. இங்குள்ள மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, மொரப்பூர், தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் மலர் சாகுபடியில் பெரும்பாலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மல்லி, முல்லை, சாமந்தி, செண்டுமல்லி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, பட்டன் ரோஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைகின்ற பூக்கள் அனைத்தும் ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.



 

இதில் பெரும்பாலான விவசாயிகள் சாமந்தி மற்றும் செண்டுமல்லி பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்பொழுது தசரா, ஆயுத பூஜை பண்டிகை வரும் நிலையில் சாமந்தி செண்டு மல்லி பூ விளைச்சல் அதிகமாக உள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் செண்டு மல்லி பூக்கள் விளைச்சல் அமோகமாக இருந்து வருகிறது. மேலும் தற்போது பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதாலும், தசரா ஆயுத பூஜை போன்ற பண்டிகைக் காலங்கள் என்பதால் நல்ல விலையும் கிடைத்து வருகிறது. ஆனால் அரூர் அடுத்த செல்லம்பட்டி, கீழானூர், முத்தானூர், ஈட்டியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூக்கள் அறுவடைக்கு வந்துள்ள நிலையில், திடீரென செண்டுமல்லி செடிகள் காய்ந்து கருகி அழிந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் தற்போது புதுவிதமான நோயால் செடிகள் அழிந்து வருகிறது.



 

இந்த நோய்க்கு என்ன வகையான மருந்துகளை தெளிப்பது என்பது குறித்து கடைகளில் தெரிவித்தாலும் கூட, மருந்துக் கடைகள் தெரியவில்லை என பதில் அளிக்கின்றனர். சாதாரணமாக செண்டு மல்லி பூக்களில் ஒரு சில நோய்கள் தாக்கும். அப்பொழுது மருந்துகளை இரண்டு முறை, மூன்று முறை தெளித்தால் செடி தெளிவடைந்து, நல்ல மகசூலைக் கொடுக்கும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நோய் புதுவிதமாக இருந்து வருகிறது. மேலும் செண்டுமல்லி விதைகள் தட்டுப்பாட்டால் ஓசூர் ராயக்கோட்டை பகுதிகளிலிருந்து, அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கி வந்து சாகுபடி செய்து வருகின்றோம்.

 



 

ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த நோயால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, செண்டுமல்லி பூச்செடி அழுகுவதற்கான காரணத்தை அறிந்து, அதனை காப்பாற்றுவதற்கு தேவையான வழிமுறைகளை வழங்க வேண்டும். அதேபோல் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை வருவாய் துறையினர் முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு செண்டு மல்லி பூ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.