நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஒப்புதல் வாக்குகளை பெற்றிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த தேர்தல் குறித்து ஊடகங்களில் விவாதம் நடக்கிறது. எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.


பாரதப் பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து சென்றார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள், தேசிய தலைவர் நட்டா பலமுறை தமிழகத்திற்கு வந்து சென்றார். கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அமித் ஷாவும் வந்து பிரச்சாரம் செய்து சென்றார். பல மத்திய அமைச்சர்கள் வேட்பாளர்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.




நான் ஒருவன்தான் பிரச்சாரம் செய்தேன்


பாட்டாளி மக்கள் கட்சி பெரியவர் ராமதாஸ் அவர்களும், அன்புமணி ராமதாஸ் அவர்களும், கூட்டணியில் அங்கம் வகித்த பல்வேறு தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். திமுக பொருத்தவரை ஸ்டாலின், அவர்களது வேட்பாளர்களை  ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாக்குகள் சேகரித்தார். கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியும் பிரச்சாரம் செய்தது. ராகுல் காந்தியும் பிரச்சாரம் செய்தார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளனும் பிரச்சாரம் செய்தார். கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். கொங்குநாடு கட்சித் தலைவர், வைகோ போன்றவர்களும் பிரச்சாரம் செய்தனர். 


அதிமுகவில் நான் ஒருவன் தான் பிரச்சாரம் செய்தேன். கூட்டணியிலிருந்து தேமுதிக தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர்.
இந்தியா கூட்டணிக்கு பலம் அதிகம். அதிமுக கூட்டணிக்கு பலம் இல்லை என பத்திரிகைகள் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்தது. இவ்வளவிற்கு இடையில் அதிமுக 2019 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளுடன் தற்போது ஒரு சதவீதம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது . இது அதிமுக கிடைத்த வெற்றியாகும்.


2024 தேர்தலில் அதிகமான வாக்குகள் பெற்றிருக்கிறோம். இதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து விட்டதாக செய்திகள் வருகிறது. தேர்தலில் பாஜக அதிக வாக்குகள் பெற்றதாக தவறான செய்தி வருகிறது. 


திமுக 2019ல் 33.52 சதவீதம். இந்த தேர்தலில் 26.93 சதவீதம் வாக்குகள் பெற்று உள்ளது. திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது. அதிமுக தான் கூடுதல் வாக்குகள் பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறது. திமுகவும் குறைவான வாக்கு பெற்றிருக்கிறது.




தென் மாவட்டங்களில் அதிமுக வலுப்பெற்று இருக்கிறதா?


தென் மாவட்டங்களில் அதிமுக வலுப்பெற்று இருக்கிறதா? என்ற என்ற கேள்விக்கு, தற்போது நடந்தது பாராளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் இல்லை. பாராளுமன்றத் தேர்தல் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தேர்தலாகும்.
அதிமுக வளர்ந்துதான் வருகிறது. அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்கு தக்கவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை. திட்டமிட்டு பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர்.


சசிகலா ஓபிஎஸ் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்து கூறியிருக்கிறார்களே என்றதற்கு, முடிந்து போன கதை. வேண்டும் என்று குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களெல்லாம் பிரிந்து சென்றதால், ஒரு சில இடங்களில் கூடுதலாக வாக்குகள் கிடைத்து இருக்கிறது.


சட்டமன்ற தேர்தல் வேற, பாராளுமன்ற தேர்தல் வேற மக்கள் பிரித்துப் பார்த்துதான் வாக்களிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் விழிப்புடன் உள்ளனர். எந்த சமயத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என கருதி வாக்களிக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.


அண்ணாமலைக்கு குறைவான வாக்குகள்


கோவையில் அண்ணாமலை குறைவான வாக்குகள் தான் வாங்கி உள்ளார். ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும், பாராளுமன்ற தேர்தல் என்றாலும் வாக்கு வித்தியாசம் மாறி மாறி தான் வரும். சூழ்நிலைக்கு தக்கவாறு மக்கள் வாக்களிக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.


நான் முதலமைச்சர் ஆனபோது என்னவோ தகவல்கள் வந்தது. மூன்று மாதத்தில் இருப்பாரா நான்கு மாதத்தில் இருப்பாரா நான்காண்டு ரெண்டு மாதம் சிறப்பான ஆட்சி தந்தோம். பிறகு கட்சி இரண்டாகும் என அவதூறு பிரச்சாரம் செய்தனர்.


அதிமுக தலைவர் காலத்திலும் சரி அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வந்தோம். வெற்றி வரும்வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள் வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதால்தான் தனித்துப் போட்டியிட்டோம். ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் தேசிய கட்சியுடன் நாங்கள் சேர்ந்து இருப்போம்.


தமிழ்நாட்டு உரிமையை காக்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமையை காக்கவும் உரிமைகள் பறி போகும்போது தடுக்கவும் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயல்படவும் அதிமுக இந்த முடிவை எடுத்தது. திமுக கூட்டணி என்ன சாதிப்பார் என பார்க்கத்தானே போகிறோம்.




பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா?


பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு செல்வீர்களா என்று கேட்டதற்கு அதை பற்றி இன்னும் சிந்திக்கவில்லை.


ஜெயக்குமார் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேராது எனக் கூறியிருக்கிறாரே, (கூட்டணியில் சேராதென ஏற்கனவே பேட்டி அளித்த வீடியோவை எடப்பாடி பழனிசாமி காண்பித்தார்)


முன்பே நாங்கள் இது குறித்து தெரிவித்துவிட்டோம். அது பற்றி தான் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்களித்த வேட்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


தேர்தல் நேரத்தில் எங்களுடன் கூட்டணி அமைத்து அந்த கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


தேமுதிக மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கூறி உள்ளனவே என கேட்டதற்கு, மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.


அதிமுக நிர்வாகிகள் பாஜகவுக்கு ஆதரவு தந்ததாக கூறுகிறார்கள் என்று கேட்டதற்கு, அப்படி இல்லை அப்படி இருந்தால் எப்படி ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்திருக்கும். இந்த தேர்தலில் ஒரு சதவீதம் அதிமுக வாக்குகள் பெற்றிருக்கிறது அவதூறு பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம். இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.