மேகதாது அணை கட்டினா டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும் என்றும் மெளனப் புரட்சி செய்வதில் விஜய் வல்லவராக உள்ளார் என்றும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பிறகும் கர்நாடகா அரசு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலங்கள் காவிரியில் தண்ணீர் திறப்பதில்லை. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் வாதாடி போராடிதான் கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற வேண்டிய நிலை இருந்து வருகிறது. தற்போது புதிதாக கர்நாடகாவில் முதல்வராக பொறுப்பேற்று உள்ள முதல்வர், மேகதாதுவில் அணைக்கட்டி தீர வேண்டும் என்ற பத்திரிகையில் தெரிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டெல்டா பாலைவனமாகிவிடும்
மேகதாது அணை கட்டி விட்டால் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். 20 மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும். கர்நாடக முதல்வர் இப்படி கருத்தை வெளியிடுவது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த அரசு மேகதாது தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வந்தார்கள். முதல்வர் ஜோசப் விஜய் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, நடுவன் மன்றம் அமைப்பது குறித்து கூறியிருந்தார்.
மூன்றாம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூருக்கு சென்று அங்கிருக்கும் கர்நாடகா முதல்வரை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனைத் தவிர்க்க வேண்டும். இன்று கர்நாடகா முதல்வர் தமிழக முதல்வரை வரவேற்று அவருக்கு உரிய மரியாதையை கொடுப்போம். ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கர்நாடகாவை சுற்றி பார்த்த பிறகு அவரது கருத்தை தெரிவிக்கலாம் என கூறியிருக்கிறார்.
மேகதாது அணை பிரச்சனை என்பது உணர்வுபூர்வமான பிரச்சனை. எனவே அனைத்து கட்சிகள் மற்றும் முக்கிய விவசாய சங்கங்களை அழைத்து இதற்கு தீர்வு காண வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தோம். இதுபோலவே பல கட்சித் தலைவர்களும் கூறி இருக்கிறார்கள். இது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனை என்று அரசுக்கு தெரிய வேண்டும்.
விவசாய கடனை தள்ளுபடி செய்யுங்கள்
தவெக தேர்தல் அறிக்கை விவசாயிகளின் சிறு, குறு பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்தார்கள். தற்போது அதற்கு மாறாத சிறு, குறு நடுத்தர விவசாயிகளுக்கு 75 ஆயிரம் மட்டுமே அதிகபட்சமாக கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்கள்.
விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மழை பொழிவு இல்லாததால் விவசாய பணிகள் செய்ய முடியாமல் தமிழக விவசாயிகள் கடுமையாக வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தவெக கூறியது போல் முழுமையாக விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாயிகளுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இப்படி அறிவிக்கப்படாமல் விட்டால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
காவிரி மேலாண்மை கர்நாடக மாநிலத்தில் உள்ள அணையில் இருந்து 15 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 3500 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இப்போது உள்ள சூழலில் தண்ணீர் தர மறுக்கிறார்கள். மேகதாதுவில் அணை கட்டி விட்டால் இது மேலும் பாதிக்கப்படும்.
1986 ஆவது ஆண்டு முதல் 2019 வரை வாதம் நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற இருப்பின்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது 15 ஆண்டுகளுக்கு செல்லும். கர்நாடகாவில் யார் முதல்வராக வந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பது கண்டனத்துக்குரியது.
மெளன புரட்சி செய்யும் விஜய்
மௌன புரட்சி செய்வதில் விஜய் வல்லவராக உள்ளார். அவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எட்டு கோடி தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. இது போன்ற வறட்சி காலத்தை செயல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை உள்வாங்கி செயல்படுவதே ஒரு நல்ல அரசு.
சட்டமன்றத்தில் அதிமுகவின் நிலை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தமிழக முதல்வர் கர்நாடகா வரவேண்டும் என அங்குள்ள முதல்வர் கூறியுள்ளார். உணர்வுபூர்வமான பிரச்சனைகள் வரும்போது அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தி தான் தீர்வு காண வேண்டும். ஆனால் இந்த அரசு அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தினால்தான் நாங்கள் வலியுறுத்த முடியும்.
மருத்துவ படிப்பிற்கு 151 இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இந்த அரசாங்கம் கையில் ஆகாத அரசாங்கம் என்பதற்கு இதுதான் சாட்சி” என்று கூறியுள்ளார்.
