காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் நீர்த்திறப்பு குறைப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1,10,000 கன அடியிலிருந்து 80,000 கன அடியாக நீர்வரத்து சரிவு.

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் கர்நாடக அணைகள் இரண்டும் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி வரை நீர்வரத்து இருந்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை குறைந்து வந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இன்று காலை நிலவரப்படி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து, வினாடிக்கு 40,000 கன அடியிலிருந்து குறைத்து வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

 



 

இதனையடுத்து காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,85,000 கன அடியிலிருந்து, 1,65,000, 1,35,000 என படிப்படியாக குறைந்தது. நேற்று மாலை வினாடிக்கு 1,10,000 கன அடியிலிருந்து நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 80,000 கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, மெயினருவி, சினியருவி, ஐந்தருவி மற்றும் பாறைகளை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த ஒரு வாரமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் 54-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவிரி ஆற்றில் மீண்டும்  தொடர்ந்து வெள்ளப் பெருக்கு நீடிப்பதால்,  ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததாலும், அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.