சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வானம் மேகமூட்டத்துடன், இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. நேற்று பெய்த கனமழையால் சேலம் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் உள்ள கொட்டச்சேடு ஆத்துப்பாலம் பகுதியில் வெள்ளம் பாலத்தின் மீது ஆர்ப்பரித்து செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலை கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் சேலம் கோரிமேடு - ஏற்காடு சாலையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பெய்த கனமழை காரணமாக ஏற்காடு குப்பனூர் சாலை மூன்று வாரத்திற்கு மூடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சாலைகளில் உள்ள கற்கள் மற்றும் பாறைகளை அகற்றிய பின்னர் போக்குவரத்திற்கு மலை கிராம மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.



இதேபோன்று, சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல கனமழை பெய்தால் இந்த பகுதி மீண்டும் சேதம் அடையும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை கனமழை காலம் தொடங்குவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என்பதை அன்றாடம் அச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கப்படாததால் இரவு நேரங்களில் வாகனத்தில் செல்வோம் வாகன ஓட்டிகள் எந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஏற்காடு முளைப்பாதையை பொதுப்பணி துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஏற்காடு மலைப்பாதையில் உள்ள ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுற்றுலா பயணி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை தொடர்ச்சியாக வருவதால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டிற்கு வர வாய்ப்புள்ளதால் ஏற்காடு மலை பாதையில் உள்ள இரண்டாவது கொண்டை ஊசி வளைவின் அருகே உள்ள சாலையை நிறைந்து சீர்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மழை காரணமாக இரவு நேரங்களில் ஏற்காடு மலை பாதையில் செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.