தருமபுரி அருகே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரை மூன்று மாத நிலுவை பணம் கட்டவில்லை எனக் கூறி, வீட்டிற்கே வந்து தொந்தரவு கொடுத்த வங்கி மேலாளர் உள்பட வங்கி அலுவலர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தருமபுரி ஹரிஹர நாதர் கோவில் தெருவில் வசித்து வரும் அனிதா கிருஷ்ணன் தம்பதியர் விவசாய வேலை செய்து வருகின்றனர். அதே தெருவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வீடு கட்ட தருமபுரியில் உள்ள ஒரு வங்கியில் 24 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.  கடந்த 10 வருட கால அவகாசத்தில் வங்கியில் வாங்கிய பணத்தை கட்டி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒவ்வொரு மாதமும் அதற்குரிய தவணைத் தொகையை தவறாமல் செலுத்தி வந்துள்ளனர். இதில் சுமார் 18 லட்ச ரூபாய் வங்கியில் கட்டிய நிலையில், போதிய வருவாய் இல்லாததால் கடந்த மூன்று மாதங்களாக வங்கிக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்த இயலாத நிலையில் இருந்துள்ளனர்.



 

இந்நிலையில் தினமும் வங்கி மேலாளர் உட்பட அதிகாரிகள் அவர்களது வீட்டிற்கு வந்து கடந்த மூன்று மாதமாக நிலுவைத் தொகை கட்டவில்லை என கூறி,  நீங்கள் வாங்கிய கடன் அதற்கான வட்டியுடன் சேர்த்து தற்போது 32 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும், தவறினால் வீட்டை ஜப்தி செய்வோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில் தகாத வார்த்தைகள் கூறி பணம் கட்ட வலியுறுத்தி மிரட்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

அதனையடுத்து இதுகுறித்து அவர்களது குடும்ப நண்பரான வழக்கறிஞர் காவேரி வர்மன் என்பவரிடம் முறையிட்டுள்ளனர். அதனையடுத்து வீட்டிற்கு வந்த வழக்கறிஞர் வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு விரைவில் பணத்தை செலுத்துவதாக கூறியும், லோக்அதால்த் மூலம் வழக்கு விசாரணை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு வங்கி அலுலர்கள் உடன்படாததையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே வங்கி மேலாளர் உள்ளிட்டோர் வழக்கறிஞரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் காவேரி வர்மன் தற்போது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் வங்கியில் வாங்கிய கடனின் பெரும் பகுதி பணம் செலுத்திய நிலையில் சொற்ப பணம் மட்டுமே கட்டவேண்டிய நிலையில், பெண்களிடம் தகாத வார்த்தை பேசி, அதற்காக கால அவகாசம் கேட்ட வழக்கறிஞரை வங்கி மேலாளர் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.