தருமபுரி அடுத்த சோகத்தூர் ஏரி தருமபுரி மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரி. இந்த ஏரிக்கு பஞ்சப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரின் மூலம் தண்ணீர் வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. மேலும் போதிய மழை இல்லாததாலும், ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் தூர்வாரப்படாமல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும், ஏரி வறண்டு காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்பே நிரம்பி உபரி நீர் வெளியேறி வந்தது.

 

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் வெளியேறி வருகிறது. இதனால் பஞ்சப்பள்ளி அணையின், பாசன ஏரிகள் மட்டுமல்லாமல், உபரி நீர் மூலம் நிரம்பும் ஏரிகளும், நிரம்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சோகத்தூர் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.



 

இந்நிலையில் இன்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு, சோகத்தூர் ஏரி முழுவதும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது. இதனைக் கண்ட சோகத்தூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து ஏரி கோடியில், மலர் தூவி, சிறப்பு பூஜை செய்து ஆடு வெட்டி வழிபாடு செய்தனர். மேலும் இந்த சிறப்பு பூஜையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடகம் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ஏரி கொடியில் மலர் தூவி தூவினர். மேலும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சோகத்தூர் ஏரி நிரம்பி இருப்பதால், சுற்றுவட்டார பகுதி மக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், காவிரி ஆற்றில் வினாடிக்கு 16,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு.



 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு வருவதாலும், காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்து வந்ததால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு வினாடிக்கு 16,000 கன அடியாக நீர்வரத்து தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 16,000 கன அடியில் இருந்து, இன்று காலை வினாடிக்கு 18,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்  பிரதான அருவி, சினியருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி, பார்த்ததற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழக காவிரிப்பு நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைந்தால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.