தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைத்து திறப்பதன் மூலம் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுதிரம், மெணசி, ஆலபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கு, வலதுபுற கால்வாய் வழியாக ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, சாலூர், புதுப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 

இந்நிலையில், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காடு மலை மீது தினந்தோறும் கனமழை பெய்து வருவதால், வாணியாறு அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மழை தொடங்குவதற்கு முன்பு அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு குறைவாக இருந்து வந்தது. தற்போது ஏற்காடு மலையில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. தொடர் மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 150 கன அடி வரை இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது மழை குறைந்து வருவதால் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 80 கன அடியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம், 64 அடி உயரத்தில் தற்போது 62 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 80 கன அடி உபரி நீர், வாணியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. 

 





 

இதனால் அணையில் தண்ணீர் வெளியேறும் காட்சி பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்து வருகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து, அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் காட்சிகளை கண்டு ரசிக்கின்றனர். இதனால் வாணியாறு ஆற்றங்கரையோரம் உள்ள வெங்கடசமுத்திரம், மோளையானூர், ஜீவா நகர், மெனசி, பூதநத்தம் அம்மாபாளையம், பறையப்பட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வாணியாற்றில் இறங்குவோ,  கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும்  எப்பொழுதும் வாணியாறு அணை நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிரம்பும் நிலையில் இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பாகவே நிரம்பியுள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் மழை பொழிந்தால், கடந்த ஆண்டை போலவே உபரிநீரிலே பாசன ஏரிகள் முழுவதும் நிரம்பும் வாய்ப்புள்ளதால், பாசன விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.