தருமபுரி  வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதபடை காவலர் மைதானம் உள்ளது. இந்த மைதானம் முழுவதும் உச்சி மரம், வேம்பு, அரசன், புங்கன், ஆல மரம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை வைத்து பராமரித்து, வளர்த்து வருகின்றனர். இந்த வளாகத்திலேயே குற்றப்பிரிவு மற்றும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு அலுவலகம் அருகே ஓராண்டுக்கு முன்பு வைக்கப்பட்ட இரண்டு சந்தன மரங்கள் நன்றாக வளர்ந்து இருந்தது.

 


 

இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நேற்று இரவு இரண்டு சந்தன மரங்களையும் வெட்டி, அதன் கிளைகளை அதே இடத்தில் போட்டுவிட்டு மரத்தை மட்டும் கடத்தி சென்றுள்ளனர். இதனை  தொடர்ந்து காலையில் மைதானத்தில் இருந்த இரண்டு சந்தன மரங்க வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அறிந்த காவல் துறை அதிகாரிகள் ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேலும் மரம் வெட்டியது தெரியாமல் இருக்க காவல் துறையினர் பெயிண்ட் அடித்து மறைத்துள்ளனர். தொடர்ந்து 24 மணி நேரமும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஆயுதப்படை மைதானத்தில், காவல் துறையினர் கட்டுபாட்டை மீறி, உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சந்தன மரத்தை வெட்டி சென்ற சம்பவம் பெரும் காவல் துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இந்த மரத்தை வெட்டி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தி வரும் காவல் துறையினர், ஆயுதப்படை மைதானம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தாமல் இருப்பது, ஊருக்குத்  தான் உபதேசம் தனக்கில்லை என்பது போல் உள்ளதாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். 



 

அதே போல் ஆயுதப்படை மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணப்பு. கேமராவை யாரும் பொருத்தவில்லை. ஒரு சில இடஙகளில்  உள்ள கேமராவும் இதற்கு பயனில்லாத நிலையில் தான் இருக்கிறது. தருமபுரி மாவட்ட காவல் துறையின் ஆயுதப்படை மைதானத்திலே சந்தன மரம் வெட்டப்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்சசியை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொள்ளையர்களை கண்டறியும், காவல் துறையின் வளாகத்திலே சந்தன மரத்தை வெட்டி கடத்திய பலே திருடர்களால், காவல் துறையினருக்கு குடைச்சல் ஏற்பட்டுள்ளது.