வத்தல்மலைக்கு பொதுமக்கள் வருகை அதிகரிப்பு-புதுப்பிக்கப்பட்ட சாலையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்பு சுவர்கள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

 

தருமபுரி மாவட்டம் கொண்டகரஹள்ளி ஊராட்சிக்குட்ட வத்தல்மலை கிராமம் மலையின் உச்சியில  மீது அமைந்துள்ளது. இங்கு சின்னாங்காடு, கொட்லங்காடு, ஒன்றியங்காடு, பால்சிலம்பு, பெரியூர், நாயக்கனூர், மண்ணாங்குழி, குழியனூர் உள்ளிட்ட கிராமங்கள் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. வத்தல்மலை 24 கொண்டை ஊசி வளைவுகளுடன், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் பிரதானமாக விவசாய தொழிலை செய்து வருகின்றனர்.  மேலும் மலைப் பிரதேசம் என்பதால் ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற குளுமையான சூழல் நிலவி வருகிறது.  இதனால் விடுமுறை நாட்களில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் வத்தல்மலைக்கு சுற்றுலா சென்று இயற்கை மற்றும் மலையின் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.  மலை என்பதால், அடிக்கடி மழை பெய்து வருகிறது. அங்கு உள்ள மலையின் மீது மேகம் சூழ்ந்திருக்கும் அழகையும், இயற்கை சூழலையும் கண்டு ரசிக்கின்றனர்.

 



 

மேலும் ஆங்காங்கே உள்ள இடங்களில் குழு புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் இளைஞர்கள் மற்றும் குடும்பத்தோடு சிலர் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடுகின்றனர். ஆனால் மலை பிரதேசம் என்பதால், அடிக்கடி மழை வருவதும் இதனால் சாலை பழுதாகி வந்தது. தற்பொழுது மத்திய அரசின் பிரதம மந்திரி சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் 10.5 கோடி மதிப்பில் வத்தல்மலை மலை அடிவாரத்திலிருந்து மலை மீது வரை சாலை தரமான முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய சாலை இருந்த போது, கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே சாலையோரம் தடுப்பு சுவர்கள் பாதுகாப்பாக இருந்தது.

 



 

தற்போது சாலை புதுப்பிக்கப்பட்ட போது, பழைய தடுப்பு சுவர்கள் வரை சாலை உயர்த்தப்பட்டு உள்ளது.  மேலும் புதியதாக ஒரு சில இடங்களில் மட்டுமே, தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் கொண்டை ஊசி வளைவுகளில் பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.  தொடர்ந்து வத்தலைமலை அழகை கண்டு ரசிக்க இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் இருசக்கர வாகனத்தில் வரும் சில இளைஞர்கள் மலை பாதையில் இறங்கும் போது சாகசங்கள் செய்கின்றனர். இதனால் கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்பு சுவர் இல்லாததால், கொஞ்சம் தவறினாலும் கூட பெரும் விபத்துகள் நேரிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே வத்தல்மலை சாலையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.