தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 40 நாட்களில் அறுவடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதம் நல்ல மழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது பெரும்பாலான மாரண்டஹள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

 



 

கடந்த ஓராண்டுக்கு மேலாக முள்ளங்கி விலை கிலோ 10ஐ கூட தாண்டாத நிலையில் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக முள்ளங்கி விலை உயர்ந்து கிலோ 30 ரூபாய்க்கு  விற்பனையானது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக சரியத் தொடங்கி உள்ளது.

 

கடந்த வாரம் கிலோ 15 ரூபாய்க்கு விற்ற முள்ளங்கி தற்போது கடுமையாக குறைந்து கிலோ 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.5 முதல் 6 ரூபாய் என, அடிமட்ட விலைக்கே வாங்கிச் செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காமல், அறுவடைக் கூலி கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் அனைத்து காய்கறிகளும் கடந்த ஒரு மாதமாக நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், முள்ளங்கி மட்டும் தற்பொழுது கடுமையாக விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

 

 



 

கோயில் பூட்டை உடைத்து 60 ஆயிரம் பணம், தங்கம், வெள்ளி  உட்பட 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு 

 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சட்டையம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ கணவாய் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் பூஜை செய்யப்படும். இந்நிலையில் அதிகாலை மூதாட்டி கோவில் வாசலில் கோலம் போட சென்றுள்ளார். அப்பொழுது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் பெரியவர்களிடம் தெரிவித்துள்ளார்.

 



 

 

தொடர்ந்து ஊர் மக்கள் வந்து பார்த்ததில், பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறியும், உண்டியல் திறக்கப்பட்டு வீசப்பட்டு கிடந்துள்ளது. இதில் கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள்  உள்ளே இருந்த உண்டியலில் சுமார் 60 ஆயிரம் பணமும், அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்ட மூன்று பவுன் தங்கம் மற்றும் வெள்ளி காசு மாலை, வெள்ளிக்காப்பு, வெள்ளி மூக்குத்தி, வெள்ளி கொடி  உள்ளிட்ட  சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

 


 

இந்த சம்பவம் குறித்து அரூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் தொடர்ந்து கோவில்களில் திருட்டு சம்பவம் நடைபெறுவதால், காவல் துறையினர் இரவு நேரங்களில் கிராம புறத்தில் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.