கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்புகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு  கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் 3 முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும். கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைத்து, இடது மற்றும் வலது புற கால்வாய்களில் தண்ணீர் திறப்பதன் மூலம் கிருஸ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பபடுகிறது. இதனால் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  இந்நிலையில் தென்பெண்ணை ஆறு கடந்த 3 மாதங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்டது.

 



 

தற்பொழுது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 1,068 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 50.07 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 1,506 கன அடி தண்ணீர்  தென்பெண்ணையாற்றில்  திறக்கப்பட்டதால், கே.ஈச்சம்பாடி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,329 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த தொடர்ந்து அணைக்கட்டு நிரம்பி, தண்ணீர் வழிந்தோடி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து 1 மாதத்திற்கு மேலாக  ஆற்றில் தண்ணீர் செல்வதால், நவலை, பெரமாண்டப்பட்டி, தொட்டம்பட்டி, எம்.வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட  பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



 

மேலும் நீர்திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவே, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையி்ல் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் நிரம்பி வழிந்து வருகிறது. மேலும் தற்போது பருவ மழை காலம் தொடங்குவதால், தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அணை கட்டிலிருந்து முன்னதாகவே விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். அப்பொழுது கடைமடை வரை விவசாய பாசனத்திற்கு தண்ணீர் செல்லும். எனவே கே.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.