பென்னாகரம் அருகே அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பகுதியை சேர்ந்த சத்யபிரகாஷ் மனைவி பரமேஸ்வரி  இருவரும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர். இதில் சத்யபிரகாஷ் பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் நிறைமாத கர்ப்பிணியான பரமேஸ்வரி, கடந்த மாதம் 19 ஆம் தேதி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு பரமேஸ்வரிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் தருமபுரி போகாமல், பென்னாகரம் தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.  ரத்தப்போக்கு இருக்கும் நிலையில், வேகமாக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பாமல், ஏரியூர், பென்னாகரம், தருமபுரி மருத்துவமனைகளுக்கென, அலைக்கழிக்கப்பட்டதன் காரணமாக சிகிச்சை கிடைப்பதில் தாமதமானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பரமேஸ்வரி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு  பலனின்றி  பரமேஸ்வரி உயிரிழந்தார். 

 



 

 

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது பணியில் இருந்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். ஆனால் தற்போது கர்ப்பிணி உயிரிழந்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, இறந்த கர்ப்பிணியின் உறவினர்கள், நீதி வேண்டும் என கேட்டு, இறந்த பரமேஸ்வரியின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு, மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது பேச்சுவார்த்தைக்கு வந்த காவல் துறையினர் மற்றும் மருத்துவ குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 




 

அப்பொழுது அந்த வழியாக வந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணியும் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் உரிய நீதி வேண்டும் மற்றும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்வமாக ஜி.கே.மணி உறுதியளித்தார். இதனை தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால், சுமார் 2 மணி நேரம் பென்னாகரம்-மேட்டூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.