தருமபுரியில்  முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியை மாவட்ட ஆட்சியர் சாந்தி  துவக்கி வைத்தார்.

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2022-23ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை குழு விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 2 ந் தேதி மாவட்ட ஆட்சியர் சாந்தி விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தன்னம்பிக்கை தீபம் ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

 

தொடர்ந்து  பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என கலந்து கொள்ளும் இந்த போட்டிகளில் பள்ளி மாணவர்கள் 4505 பேரும் மாணவிகள் 1359 பேர் என மொத்தம் 5864 நபர்கள் இப்போட்டிக்காக பதிவு செய்துள்ளனர். இதில் கைப்பந்து, கால்பந்து, கபடி, கூடைப்பந்து, தடகள போட்டிகள் என 50 வகையான விளையாட்டு போட்டிகள் இந்த மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது.



 

இதனை தொடர்ந்து  மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெரும் நீச்சல் போட்டியினை தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 204 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்துகின்றனர். மேலும், இன்று மாணவிகளுக்கான நீச்சல் போட்டியும், நாளை  கல்லூரி மாணவ மாணவிகளுக்கான நீச்சல்போட்டியும் நடைபெற உள்ளது. 

 

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா 3000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ரூபாய் 2000, மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். 



 

மேலும்  மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக 75000, மூன்றாம் பரிசாக ஐம்பதாயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல் குழு போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு வீரர்களுக்கும் முதல் பரிசாக ஐம்பதாயிரம், இரண்டாம் பரிசாக 37,500, மூன்றாம் பரிசாக இருபத்தி ஐயாயிரம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், நீச்சல் பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.