தருமபுரி  மாவட்டம், அரூர் ஒன்றியத்தில் மொத்தம் 34 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் முத்தானூர், ஈட்டியம்பட்டி, பாளையம், கூடலூர், கீழானூர், செல்லம்பட்டி, பொய்யப்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, பையர்நாயக்கன்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில்  ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதியில் இருந்து  அரசு கல்லூரி, பள்ளி படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்கள், மருத்துவமனை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்பவர்கள் அனைவரும் அவர்களது சொந்த கிராமத்தில் இருந்து பஸ் மூலம் பயணித்து அரூர் நகரின் முதல் பஸ் நிறுத்த பகுதியான அம்பேத்கர் நகரில்  இறங்கி அரூர் பஸ் ஸ்டாண்ட் இணைக்கும் குறுக்கு சாலையில் ஐந்து நிமிடத்தில் நடந்து சென்று பஸ் நிலையத்தை அடைந்து, அங்கு உள்ள அவசர வழி மூலம் தங்களுக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு தேவையான பஸ்ஸில் பயணம் செய்து பயனடைந்து வந்தனர். மேலும் அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு பஸ், பஸ் ஸ்டாண்ட் வந்தடைய குறைந்தபட்சம் கால் மணி நேரம் ஆகும். இதனால் தான் பஸ் பயணிகள் குறுக்கு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இருந்தது. 



 

தற்பொழுது சுமார் ரூ.4 கோடி மதிப்பில் அரூர் பஸ் ஸ்டாண்ட் இடித்து, நவீன வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இருந்த இடம், அடைக்கப்பட்டு, கட்டிடம் கட்டி வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இல்லையென்றால், கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், அவசர வழி விட வேண்டும் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் நகரப் பகுதியில் 4,5,6,7,8, ஆவது வார்டு பொதுமக்கள், அவசர வழி விட வேண்டும் என வலியுறுத்தி, திடீரென புதிதாக கட்டும் பணியை  தடுத்து நிறுத்தினர். இதனால் அரூரில் பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து பேரூராட்சி நிர்வாகத்தினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது பொதுமக்கள் வசதிக்காக புதிய கட்டிடத்தில் அவசர வழி ஒதுக்கி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.