காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 2000 கனஅடி மட்டுமே நீர்வரத்து இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் வினாடிக்கு 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து, 5000, 8000 கன அடி என படிப்படியாக உயர்ந்து வந்தது. தொடர்ந்து நேற்று மாலை வினாடிக்கு 8000 கன அடியாக இருந்த நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரித்தது.



 

இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தற்பொழுது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14000 கன அடியாக இருந்த நீர்வரத்து 11000 கன அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி பார்ப்பதற்கு அமையுமாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து 10,000 கன அடிக்கு அதிகரித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளதால், படிப்படியாக நீர்வரத்து குறைய வாய்ப்பிருப்பதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.