தருமபுரியில் ரூ.3.22 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அரசு அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் விடுதி, பணிகள் முடிவடைந்தும், ஆறு மாதமாக பூட்டிய கிடப்பதால், செடி கொடிகள் முளைத்தும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 

தருமபுரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதுகலை எனஈஈஈ 4000 மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரி மாணவர்கள் தங்கி படிப்பதற்கு ஏதுவாக ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ஒட்டப்பட்டியில் அரசு அம்பேத்கர் கலை கல்லூரி மாணவர் விடுதி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் இரண்டு காப்பாளர்கள் நான்கு சமையலற்கள் மூன்று தூய்மை பணியாளர்கள் இரவு காவலர் அலுவலக உதவியாளர் என 11 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த விடுதிக் கட்டிடம் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்து வந்ததால், அதனை தொடர்ந்து இந்த விடுதி கட்டிடம் இடித்த அகற்றப்பட்டது. மேலும் அதே இடத்தில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக கடந்த அதிமுக ஆட்சியில், புதிய விடுதி கட்டும் பணி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விடுதி கட்டுவதற்கு ரூ.3.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தாட்கோ சார்பில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் கல்லூரி மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அறைகள், குளியல் அறை, கழிப்பறை, சமையல் கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டது. 



 

இதனால் தற்காலிகமாக அரசு மாணவர் விடுதி அதியமான்கோட்டை மேம்பாலம் அருகே திருமண மண்டபத்தில் செயல்பட்டு வந்தது. இதில் போதிய கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளியலறை உள்ளிட்டவை இல்லாததால், மாணவர்கள் சிறந்த மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் 400 மாணவர்கள் தங்கும் இந்த விடுதிக்கு இரண்டு கழிவறைகள் மட்டுமே இருந்து வருகிறது. இதனால் அதிக காலையில் மாணவர்கள் கழிவறை செல்வதற்கும், குளிப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் சில மாணவர்கள் வெளியில் அறைகள் எடுத்து தங்கி உணவுக்கு மட்டும் நிலை இருந்து வருகிறது. மேலும் மழைக் காலங்களில் மழைநீர் கசிந்து வருவதால், மாணவர்கள் அறையில் படுக்க முடியாத சூழலும் உடைமைகளை தரையில் வைத்தால் நனைந்து விடுவதால், அதனை கட்டில் மேல் வைத்துவிட்டு படுக்க இடம் இல்லாமல், மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் அடிக்கடி உள்ளே நுழைந்து விடுகிறது. இதனால் மாணவர்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர்.



 

அதேபோல் கல்லூரிக்கும் இந்த தற்காலிக விடுதிக்கும் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் இருப்பதால் தினந்தோறும் மாணவர்கள் கல்லூரியில் இருந்து விடுதிக்கு வருவதற்கும், விடுதியில் இருந்து கல்லூரிக்கு செல்வதற்கும் நீண்ட நேரம் நடந்து செல்கின்ற நிலை இருந்து வருகிறது. அதேபோல் காலையில் வகுப்புக்கு செல்கின்ற மாணவர்கள் காலதாமதம் ஆகவே செல்கின்ற நிலையும் இருந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி அரசு நிதி ஒதுக்கியும் கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஆறு மாதங்கள் கடந்தும், புதிய விடுதி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் போதிய வசதிகள் இல்லாத இடத்தில் மாணவர்கள் தொடர்ந்து தங்கு நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பல மாதங்களாக பூட்டியே இருப்பதால், புதிய விடுதி கட்டிடத்தில் புல் வளர்ந்து செடி கொடிகள் வளர்ந்து, சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து மது அருந்தியும் வருகின்றனர். எனவே விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் விடுதியை கட்டிடத்தில் மாற்ற வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இரண்டு மாதம் மூன்று மாதம் என புதிய விடுதி திறக்கப்படுவது என்பது தள்ளித் தள்ளியே வருகிறது. மேலும் தற்காலிக விடுதிக்கு மாதம் 60 ஆயிரம் வாடகை கொடுக்கப்படும் வருகிறது. இதனால் கடந்த ஆறு மாதத்தில் விடுதி திறக்கப்படாததால் அரசுக்கு ரூ.3.60 இலட்சம் வீணாக செலவாகிறது. எனவே புதிய புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் விடுதியை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 

இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ஷாகுல் அமீத்-யிடம் கேட்டபோது, “விடுதி பணி நிறைவு பெற்று, கட்டிட பணிகளை மேற்கொண்ட தாட்கோ துறை ஒப்படைத்துள்ளனர் அவர்கள் முடிக்கப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையின் படி அதனை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தொடர்ந்து கட்டிடத்தை திறப்பதற்காக மாவட்ட ஆட்சியர் வழியாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசிடமிருந்து உத்தரவு கிடைக்கப் பெற்றவுடன் மாணவர்கள் பயன்பாட்டிற்கு விடுதி கட்டிடம் திறக்கப்படும்” என தெரிவித்தார்.