பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி கிராமத்தில் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வானவெடி பயன்படுத்தியதால் தீப்பிடித்து பல ஏக்கர் கரும்பு எரிந்து நாசமானது. வனத் துறையினரை கண்டித்து கிராம மக்கள் நேற்றிரவு அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

 


தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் அருகே கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்த  ஜோடி யானையில் ஒரு மக்னா யானை கும்கி உதவியுடன் பிடித்து அப்புறப்படுத்த பின்னர் அந்த ஜோடிமில் ஒன்றான ஆண் யானை பாப்பாரப்பட்டி, பாலக்கோடு பகுதியில் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த யானை பிக்கிலி ரைஸ் மில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சிவராஜ் மற்றும் மாதையன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் நேற்று மாலை புகுந்தது. இரவு எட்டு மணி வரை அப்பகுதியில் இருந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை மற்றும் யானை காவலர்கள் பட்டாசுகளையும் வானவெடிகளையும் கொளுத்தி யானையின் மீது விட்டனர். அப்போது கரும்பு தோட்டத்தில் காய்ந்து இருந்த கரும்பு சோகையில் தீ பற்றியது. தொடர்ந்து தீ வேகமாக பரவியதால் அப்பகுதியில் உள்ள பல  ஏக்கர் பரப்பிலான கரும்பு பயிர்கள் தீயில் கருகி நாசமானது.



 

மேலும் கரும்பு பயிர்கள் தீயில் எரிந்து நாசமானதை கண்ட அப்பகுதி விவசாயிகள் வனத்துறையின் அலட்சியப் போக்கை கண்டித்தும் தீயில் எரிந்து நாசமான கரும்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் யானை விரட்டும் பணியில் மேலும் கூடுதலான வனத்துறை பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி மலை கிராமத்திற்கு வந்து திரும்பிய அரசு பேருநாதை சிறை பிடித்து ரைஸ் மில் பேருந்து  நிறுத்தம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

இந்த பேச்சுவார்த்தையில் கரும்புத் தோட்டத்தில் தீ பரவியதால் தான் தொடர்ந்து காட்டுயானை அருகில் இருந்த புதுகரம்பு, தண்டுகாரணஅள்ளி மற்றும் குறவன் நின்னை கிராமங்களில் ஊருக்குள் புகுந்து சென்றது. மேலும் வனத் துறையினர் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை விரட்டும் போது ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் காட்டு யானைகள் 

ஊருக்குள் புகுந்தும், விளை நிலங்களை சேதப்படுத்தியும் வருவதால், அப்பகுதியில் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.