கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி வனப் பகுதிகளில் இருந்து உருவாகும் சின்னாறு தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது.  தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று வெள்ள பெருக்கெடுத்து, ஆறாக பரந்து விரிந்து வரும் சின்னாறு, சுமார் 50 அடி உயரத்தில் இருந்து, நல்லூர் ஊராட்சியில் தொல்லேகாது என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. சின்ன ஆறாக வரும் நீரானது, இந்த இடத்தில் பாறைகளுக்கிடையில்  இரண்டாக பிரிந்து இடது வலது புற காதுகளில் இருந்து தண்ணீர் வெளியேறும் வகையில் தோற்றமளிக்கிறது. இதனால் இந்த இடத்திற்கு தொல்லேக்காது நீர்வீழ்ச்சி என்று பெயர் ஏற்பட்டது. மேலும் இந்த ஆற்றங்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் மற்றும் ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளதால் பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் புனித நீராடவும், ஈமச் சடங்கிற்காகவும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

 



 

தொடர்ந்து ஆண்டுதோறும் வற்றாத நீர்வீழ்ச்சியாக சின்ன ஆற்றில் கொட்டிக் கொண்டிருந்தது தொல்லேக் காது நீர்வீழ்ச்சியில் கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டு வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட வனப் பகுதிகளிலும் பெட்டமுகிலாலம் மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால், தற்பொழுது சின்ன ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வர தொடங்கியுள்ளது. இதனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நீர்வீழ்ச்சியில் இரண்டு பக்கமும் அருவி கொட்டுகிறது. இதனால் இந்த அருவியில் குளிப்பதற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லேக்காது நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 



 

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சின்னாற்றில் தண்ணீர் வருவதால், தற்போது தொல்லேகாது நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் இரண்டு நீர்வீழ்ச்சிகளிலும் குளித்து மகிழ்கின்றனர். ஆனால் பாறைகளாக இருப்பதால், பெரியவர்கள், சிறியவர்கள், முதியவர்கள் வருவதால், பாதுகாப்பில்லாத சூழல் இருந்து வருகிறது. மேலும் சுமார் 50 அடி உயரத்தில், பார்ப்பதற்கு ரம்மியமாக கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியை மாவட்ட நிர்வாகமும் சுற்றுலா துறையும் உரிய ஆய்வை மேற்கொண்டு, தொல்லேகாது நீர்வீழ்ச்சியை சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலக்கோடு பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.