தருமபுரி அருகே லாரி பட்டறையில் நிறுத்தி வைத்திருந்த டாரஸ் லாரியின், டீசல் டேங்க் வெடித்ததில் இரண்டு லாரிகள் ஒரு இருசக்கர வாகனம் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் சுமார் 50 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பென்னாகரம் மேம்பாலம் அருகே பச்சையப்பன் என்பவர் லாரி பட்டறை வைத்துள்ளார். இந்த பட்டறையில் தருமபுரியை சேர்ந்த மணி என்பவர் லாரியை பழுது பார்க்க விட்டுள்ளார். ஆனால் லாரி பழுது நீக்கியும், எடுக்க வரவில்லை. இதனால் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை கர்நாடகாவில் இருந்து திருநெல்வேலிக்கு மாத்திரை காய் ஊறுகாய் போடுவதற்காக சுமார் 21 டன் ஏற்றிக் கொண்டு சௌகர் நந்தகுமார் என்பவர் லாரியை எடுத்து வந்துள்ளார். அப்பொழுது தருமபுரி அருகே வந்த பொழுது செலவுக்கு பணம் தேவை என்பதால், ஏடிஎம் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த லாரி பட்டறையில் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்துள்ளார்.

 


 

அப்பொழுது திடீரென லாரியில் இருந்து வெடிச்சத்தம் ஒன்று கேட்டு உள்ளது. இதனை அறிந்த லாரி ஓட்டுநர் டயர் வெடித்ததோ என்று அச்சத்தில் பார்த்துள்ளார். ஆனால் டீசல் டேங்க் வெடித்து, தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் அங்கிருந்தவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு பதறி அடித்து ஓடி வந்துள்ளனர். ஆனால் தீ அருகில் இருந்த லாரி மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பரவி மளமளவென  எரிய தொடங்கியது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தருமபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வருவதற்குள்ளாக இரண்டு லாரிகள் கொழுந்து விட்டு எரிந்து வந்தது.

 


 

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அருகில் பழுதுபார்க்க வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி முழுவதுமாக எரிந்து சேதம் ஆனது. ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாததால்,  தீயணைப்பு வீரர்கள் இரண்டு வண்டிகளை வரவழைத்து  தீயை அனைத்தனர். ஆனால் அதற்குள்ளாக ஏற்கனவே லாரி பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மற்றும் ஒரு இருசக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமானது. மேலும் ஊறுகாய் பாரம் ஏற்றி வந்த லாரி பாதி எரிந்து சேதம் ஆனது. இந்த தீ விபத்தில், சுமார் ரூ.50 இலட்சம் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே டீசல் டேங்க் வெடித்து லாரிகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.