கடன் உதவி பெற வருபவர்களை அழைக்கழிக்காமல் உரிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு கடன் வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர்  சாந்தி வங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

 


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தில் உள்ள மக்களை வாழ்வாதாரத்தை உயர்த்தி தொழில் முனைவராக உருவாக்குவதற்கு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்ட கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் குறித்து வங்கி மற்றும் தாட்கோ மேலாளர்கள் எடுத்துரைத்தனர். அப்பொழுது எல்லா திட்டங்களிலும் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்க, துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் வங்கிகளுக்கு சென்றால், ஆவணங்கள் சரியில்லை, ஜாமீன் தாரர்கள் வேண்டும் என பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழித்து வருகின்றனர். மேலும் பண பரிவர்த்தனை, வங்கியில் கேட்கப்படுகின்ற விவரங்கள் அனைத்தும் கொடுத்தால் கூட, உங்களது ஊரில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி, கடனே வழங்காமல் திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 



 

இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, எஸ்சி எஸ்டி மக்களை தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிதிகள் ஒதுக்கி வருகிறது. இந்த திட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் பெரிய தொழில் செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் புதிதாக தொழில் முனைய தொடங்க வருபவர்கள், பெரிய அளவில் கடன் உதவி பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட வேண்டாம்.  அதேபோல் வங்கியில் பெரிய அளவிலான தொழில்களை மேற்கொள்வதற்கு வீடு மற்றும் நிலப் பத்திரங்களை கேட்பதால், தொழில் தொடங்க இயலாது. இதில் சுமார் பத்து லட்சத்துக்கு கீழ் இருந்தால், வங்கிகளில் ஜாமீன் தாரர்கள் கேட்காமல் வழங்க முடியும்.  எனவே தொழில் முனையை வருபவர்கள் இதனை பயன்படுத்தி கடன் உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.  ஒரு சில இடங்களில் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் அறியாமையை பயன்படுத்தி, வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த திட்டங்களில் பயன்பெற முயற்சிக்கின்றனர். இதற்கு இடம் கொடுக்காமல் தங்களுக்கு கிடைக்கின்ற இந்த திட்டத்தினை பயன்படுத்தி அனைவரும் தொழில் முனைவோராக வரவேண்டும்.



 

மேலும், கடனுதவி பெறுபவர்களிடம் உரிய விவரங்களை பெற்றுக் கொண்டு அழைக்கழிக்காமல், விண்ணப்பதாரரை நிராகரிக்காமல், அதற்கான தேவைகளை விவரங்களை கேட்டு கடன் உதவிகளை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மட்டுமே தொழில் முனைவோரை அதிகமாக உருவாக்க முடியும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தாட்கோ மேலாளர் சிட்டிபாபு, தொழில் மைய அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.