தருமபுரி நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய கழிப்பிடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க 1 ரூபாய்க்கு பதில்  10 ரூபாய் என அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தனர். இந்த புகாரை தொடா்ந்து நகரமன்ற தலைவா் லட்சுமி, ஆணையாளர் சித்ரா உள்ளிட்டோர் இன்று தருமபுரி நகர பேருந்து நிலையம் மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கழிப்பறைகளை நேரடியாக ஆய்வு செய்தனர். அப்பொழுது ஆய்வு செய்ய வருவதை, முன்னாடியே கழிப்பறை பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.



 

இதனை தெரிந்து கொண்ட ஒப்பந்ததாரர், கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்து வைத்திருந்தனர்.  மேலும் நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில், குளியல் அறையில், மின்விளக்கு வசதி இல்லாமல் இருந்தது. இதனை அடுத்து நகராட்சி ஆணையாளர் சித்ரா ஒப்பந்ததாரை அழைத்து குளியலறையில், மின்விளைக்கு பொருத்த வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நகர பேருந்து நிலையத்தில் பூக்கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த கடைகளை கண்ட ஆணையாளர் சித்ரா, அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் விற்பனைக்கு வந்திருந்த, பூக்களை பணியாளர்கள் பறிமுதல் செய்து நகராட்சி வாகனத்தை எடுத்துச் சென்றனர். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்கள், கடையின் அளவை விட கூடுதலாக முன்புறத்தில் பூக்களை கொட்டி விற்பனை செய்ய நிழல் குடை அமைத்திருந்தனர். இதனை நகராட்சி அதிகாரிகளின் உத்தரவு அடுத்து நிழலுக்காக போடப்பட்டிருந்த தகரங்களை கடைக்காரர்கள் அப்புறப்படுத்தினர்.



தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு, நிலத்தை அபகரித்து, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, குடிபோதயில் சாலையில் படுத்து போராடியவரால், போக்குவரத்து பாதிப்பு.

 

தருமபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த வீரமணி (வயது 44) லாரி ஓட்டுனர் என்பவருக்கும்,  உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரி பூர்வீக சொத்து பிரித்து கொள்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதில் பூர்வீகம் சொத்து தர மறுத்து, வீரமணியை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்து வீரமணி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.



 

இதனால் மனமுடைந்து வீரமணி, திடீரென அரசு  மருத்துவமனை முன்பு, சேலம், தருமபுரி சாலையில் பேருந்தின் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவல் துறையினர், 15 நிமிட பேச்சுவார்த்தைக்கு பின் அவரை, சாலையில் இருந்து அப்புறப்படுத்தி விசாரித்தனர். அப்பொழுது பூர்வீக சொத்து பிரித்து தராமல், தன்னை தாக்கியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பூர்வீக சொத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை பெற்று தரவேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து, தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திடீரென சாலையில் படுத்து ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பூர்வீக சொத்து பிரச்னையால், சாலையில் படுத்து போராடியவரால், தருமபுரியில் பரபரப்பு ஏற்பட்டது.