தருமபுரி பூக்கள் சந்தையில் ஆயுத பூஜையையொட்டி பூக்களின் விலை ஒரு மடங்கு  உயர்ந்ததால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் 5000 ஏக்கருக்கு மேல் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படுகின்ற பூக்கள்  சென்னை, கோவை, பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தருமபுரி பேருந்து நிலையத்தில் நடைபெறும் தினசரி பூக்கள் சந்தையில் 10 டன் முதல் 20 டன் வரை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

 

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.  ஆயுதபூஜை பண்டிகை என்பதால், பூக்களின் விலை ஒரு மடங்கு உயர்ந்து விற்பனையாகிறது. அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்களின் தரம் குறைந்தும், எதிர்பார்த்த அளவில் பூக்கள் சந்தைக்கு வரத்து இல்லாமல் உள்ளது.  இதனால் நேற்று முன்தினம் முதல் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.



 

 பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ சாமந்தி பூ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் குண்டு மல்லி, ஊசி மல்லி கிலோ ரூ.700 ரூபாய்க்கும், கனகாம்பரம் ரூ.800, அலரி ரூ.360, காக்கடா ரூ.600, கோழி கொண்டை பூ ரூ.160,  சம்பங்கி ரூ.260, வாடா மல்லி ரூ.80, ஜாதி மல்லி ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பட்டன் ரோஸ் ரூ.240, ஒரு கட்டு ரோஜா ரூ.200 என  பூக்களின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கடுமையாக சரிந்து வந்த நிலையில், ஆயுதபூஜை பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால், பூ வியாபாரிகள் மற்றும் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 



 

ஒகேனக்கலில் 3 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி-சுற்றுலா டயணிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி.

 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளம் தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பிரதான அருவிக்கு செல்லும் நுழைவு வாயில், பெண்கள் குளிக்கும் நீர் அருவி, மெயினருவி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. அதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. தொடர்ந்து சேதம் எறுபட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் மாவட்ட நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரிசல் இயக்கம் மட்டும் அனுமதி வழங்கியது.



 

தற்போது நீர்வரத்து குறைந்ததாலும், மெயின் அருவிகளில் ஏற்பட்ட சேதங்களை சீர் அமைக்கும் பணி முடிவடைந்ததையடுத்து, மூன்று மாதங்களுக்கு பிறகு, இன்று முதல் ஒகேனக்கல் மெயின் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனால் சுற்றுலா பயணிகளும், சுற்றுலா தொழிலாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தொடர் விடுமுறை காரணமாக இன்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில்  குளித்தும், பரிசல் சவாரி செய்து அருவிகளில  அழகை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.