ஏரியூர் ஒன்றிய சேர்மேனை சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுக்கும் துணை சேர்மன் மற்றும் அவரது தந்தை மீது  நடவடிக்கை எடுக்க,  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சேர்மேன் புகார் மனு.

 

தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஒன்றியத்தில் ஒன்றிய குழு துணைத் தலைவராக ஏரியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தனபால், ஒன்றிய குழு தலைவர் பொறுப்பில் உள்ள பழனிச்சாமியை சாதிப்பெயரை சொல்லி திட்டி தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அலுவலகத்திற்குள் நுழைய கூடாது, அவ்வாறு நுழைந்தால் கொன்று விடுவேன் என்றும், அவரை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒன்றிய குழு துணை தலைவர் தனபாலின்  தந்தை கோவிந்தராஜ் என்பவர், பழனிச்சாமியை வீட்டிற்கு அழைத்து காலால் எட்டி உதைத்து, அடித்து துண்புறுத்தியுள்ளார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள இருக்கையில் உட்கார கூடாது என மிரட்டி துன்புறுத்தியதாகவும், அரசு கொடுத்துள்ள வாகனத்தில் நீ செல்லக்கூடாது, அதனை எனக்குத்தான் சொந்தம் என்று கூறி அதையும் மீறி நீ சென்றால் ஜே.சி.பி, விட்டு உன்னை ஏற்றிக் கொன்று விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அலுவலகத்திற்குச் சென்று பீரோவில் வைத்திருந்த காசோலைகளை திருடிச் சென்று பணத்தை எடுக்க முயற்சி செய்ததாகவும்,  கையெழுத்திட்ட வெற்று பத்திரத்தை எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

 


 

இதுகுறித்து அதிமுக தருமபுரி மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் அவர்களிடத்தில், தொலைபேசி  மூலம் நடந்த சம்பவத்தை கூறும் பொழுது, முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், ஏரியூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபால் கூறுவதை கேட்டு அவர் வழியில் நீ நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்துள்ளார். ஆனால் புகாரளிக்க ஆட்சியரை நேரடியாக பார்க்க முடியாததால், திரும்பி சென்றுள்ளார்.

 


 

தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னை சாதிப் பெயரைச் சொல்லி அசிங்கமாகவும், கேவலமாகவும் பேசிய, என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய கோவிந்தராஜ், தனபால், ஆகியோர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல் என்னுடைய காசோலைகளை திருடியவர்கள் மீதும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீதும் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறும் இந்த சம்பவத்துக்கு பின்புலமாக உள்ளவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு அதிமுகவை ஏரியூர் ஒன்றிய குழு தலைவர் பழனிசாமி புகார் மனு அளித்துள்ளார்.  மேலும் நாளை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளார்.