மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் பொருட்டும், வாசிப்பை நேசிக்கச் செய்திடவும் தமிழகம் முழுவதும் அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகை அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. இம்மையத்தில் வாசிப்பு அறை, ஸ்மார்ட் வகுப்பறை, கணினி மையம், நூலகர் அறை, கண்காணிப்பு கேமிரா கட்டுப்பாட்டு அறை, மேலாளர் அலுவலகம் மற்றும் இருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்புக் கேமிராக்கள், எல்.சி.டி தொலைக்காட்சி, புரொஜெக்டர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுசார் மையம் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதன் மூலம் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


 

 


அறிவு சார் மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை கோட்டையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சேலம் அறிவு சார் மையத்தினை திறந்து வைத்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


காணொலி வாயிலாக சேலத்தில் இருந்தபடி, பேசிய சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்திரன், அறிவுசார் மையத்தினை திறந்து வைத்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், "மாநிலம் முழுவதும் சேலத்தையும் சேர்த்து 71 அறிவு சார் மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். இதன் மூலம் பெருநகரங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய நவீன வசதிகள் ஊரகப்பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சேலத்தில் அய்யந்திருமாளிகையில் ரூ.2.50 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள அறிவு சார் மையத்தில் மாநகராட்சி, நூலகத்துறை, வேலைவாய்ப்புத்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து யுபிஎஸ்சி, டிஎன்பிஸ்சி, வங்கி போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கப்படும். அனைத்தும் இலவசமாகும். சேலம் மாநகரைத் தொடர்ந்து ஆத்தூர் மற்றும் சங்ககிரியில் அறிவு சார் மையங்கள் திறக்கப்படும்" என்று தெரிவித்தார்.