தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலை கிராமத்தில் 64 மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இதில் அரசநத்தம், கலசப்பாடி, கருக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லை. வனப் பகுதியை கடந்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால், சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் கிராம மக்கள் விவசாயப் பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லவும், வெளியூர் வேலைக்கு செல்வதற்கும், மருத்துவமனை செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் சாலை வசதி வேண்டி கிராம மக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் தனிப்பிரிவு என பல்வேறு இடங்களில் மனு அளித்தனர். ஆனால் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதி அளித்து விட்டு சென்றுள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, மலை கிராம மக்கள் ஒன்றிணைந்து சாலை வசதி, செய்து தர வேண்டி, தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனர். இதனையடுத்து திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் செந்தில்குமார் கிராம மக்களிடம் நேரடியாக சென்று, வெற்றி பெற்றதும் சாலை அமைத்து தருவதாக உறுதியளித்திருந்தார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசி கடந்த நான்கு ஆண்டுகளாக சாலை வசதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். தற்பொழுது வனப் பகுதியில் உள்ள ஐந்து கிலோமீட்டர் சாலை அமைப்பதற்கு தேவையான நிலத்தினை தொப்பூர் அருகே உள்ள கம்மம்பட்டி பகுதியில் வனப் பகுதிக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



 

இதனை தொடர்ந்து மத்திய அரசு வாச்சாத்தி முதல் கலசப்பாடி, அரசநத்தம் கிராமங்களுக்கு ஐந்து கிலோமீட்டர் சாலை அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை அமைப்பதற்கான அனுமதி கிடைத்ததை கிராம மக்களிடம் நேரில் சென்று தருமபுரி செந்தில்குமார் தெரிவித்தார். அப்பொழுது 75 ஆண்டுகளாக சாலை வசதி கிடைக்காமல், தவித்து வந்த நிலையில், தற்போது சாலை பெற்றுத் தந்துள்ள, தருமபுரி எம்பி செந்தில்குமாருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் இந்த சாலை அமைப்பதற்கு விசாரணை, ஆய்வு என ஆறு கட்டங்களாக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு தற்பொழுது அனுமதி பெறுவதற்கு நான்கு ஆண்டுகள் முடிந்துள்ளது என எம்பி செந்தில்குமார் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

 

மேலும் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் வாச்சாத்தி முதல் அரசநத்தம், கலசப்பாடி மலை கிராமங்களுக்கு வனப் பகுதியில் சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து கொடுத்த எம்பி செந்தில் குமாருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.