தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க ஆளுநர் கையெழுத்திடக் கோரி, தருமபுரியில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் நேற்று தொடங்கியது.

 

தமிழர் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அதிகாரப்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அரசுப் பல்கலைக்கழகம் அவசியம். இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவப் பல்கலைக்கழகம், ஹோமியோபதி மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆங்கில மருத்துவத்துக்கு ஏராளமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. 

 

ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் முந்தைய- தமிழ் மண்ணின் கலாசாரத்துடன் இணைந்த மூத்த மருத்துவ முறையான சித்த மருத்துவத்துக்கு இதுவரை பல்கலைக்கழகம் இல்லை. இந்தக் குறையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்கீடும் செய்து நிலமும் தேர்வு செய்யப்பட்டு விட்டது.

 

ஆனால், சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவில் ஆளுநர் கையெழுத்திடவில்லை. இதனால் நீண்டகாலக்கனவு தடைப்பட்டு நிற்கிறது. எனவே, சித்த மருத்துவப்பல்கலைக்கழக சட்ட முன்வடிவில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.



 

சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டு, மூத்த சித்த மருத்துவரும் உலகத் தமிழ் மருத்துவக் கழகத் தலைவருமான மைக்கேல் செயராசு, எழுத்தாளர் முத்துநாகு, செயல்பாட்டாளர் சீ.அ. மணிகண்டன் ஆகியோர் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுகின்றனர். இதில், தருமபுரி மாவட்டத்தில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

 

தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் இந்த இயக்கம் தொடங்கியது.  சீத்த மருத்துவப் பேராசிரியர் மு. மாதேஸ் தொடங்கிவைத்து கையெழுத்திட்டார். தொடர்ந்து சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் இயற்கை மரபுப் பொருட்கள் விற்பனையாளர்கள் ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். 



 

தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறும்பணிகளும் நடைபெறும் என்றும், மொத்தமாக அனைத்தும் சேகரிக்கப்பட்டு, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழியே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கையெழுத்து இயக்கத்தைத் தொடர்ந்து சந்தையில் மூத்த தமிழர் மருத்தும் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. டாக்டர் மு.மாதேஸ் உரையாற்றினார்.

 

இதற்கான ஏற்பாடுகளை தமிழர் மரபுச் சந்தை மற்றும் தருமபுரி மக்கள் மன்ற நிர்வாகிகள் உமா சங்கர், நிர்மல்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.