Just In





Bangalore Pugazhendi: 'அதிமுகவை இனி ஒருங்கிணைக்க முடியாது' - பெங்களூர் புகழேந்தி
கொடி எடுக்கும் தொண்டர்களே இனி முடிவெடுப்பார்கள் என மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.

சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி என சொன்னவர்தான் அண்ணாமலை. ஒரு ஆட்சியை அமைக்கவும் கலைக்கவும் நன்கு தெரிந்தவர்தான் அமித்ஷா. அமித்ஷாவால்தான் மோடியே பிரதமராக இருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு இன்னும் முடியாதபோது செயற்குழு கூட்டாமல் கூட்டணி முடிவு எப்படி எடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தொண்டர்கள் ஏற்காததால் தான் அனைத்து தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தது என்றார். வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ரைடுக்கு பயந்து தான் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று கூறினார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என பொதுக் கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய வீடியோ. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பேசிய வீடியோக்களை செய்தியாளர் சந்திப்பில் ஒளிபரப்பினார்.
அதிமுக பாஜக கூட்டணியால் அண்ணாமலை பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்காக அண்ணாமலையை காலி பண்ணியுள்ளார் அமித்ஷா. ஜெயலலிதா இருக்கும்போதே முதல்வராக அடையாளம் காண்பிக்கப்பட்டவர் பன்னீர்செல்வம், மானம் மரியாதையை விற்று அரசியல் தேவையா? என சாடினார். சசிகலா வீட்டை விட்டு கூட வெளியே வராமல் அதிமுகவை எப்படி இணைப்பார். அதிமுகவை இனி ஒருங்கிணைக்க முடியாது. ஒருங்கிணைப்பு குழுவின் முயற்சிகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமியால் வீண் போனது. ஆகையால் கொடி எடுக்கும் தொண்டர்களே இனி முடிவெடுப்பார்கள் என மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார். அதிமுக தொண்டர்கள் பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தியில் உள்ளனர். பாஜக கூட்டணியை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார். இந்தக் கூட்டணியால் எடப்பாடி தொகுதியில் கூட எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்க மாட்டார். அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் கொடி எடுக்கும் தொண்டர் அணியில் இணைவார்கள். முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்றிணைைய உள்ளனர் அதற்கான பயணத்தை முன்னெடுக்க உள்ளதாக கூறினார். திமுக அதிமுக இடையே மறைமுக தொடர்பு இருப்பதால்தான் கொடநாடு விவகாரத்தை திமுக அரசு கையில் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பாஜகவுடன் கூட்டணி வைத்து தவறு செய்து விட்டேன். இனிமேல் எந்த காலத்திலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது என பேசிய வீடியோவை அவர் வெளியிட்டார்.
அமைச்சர் பொன்முடி குறித்த கேள்விக்கு, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக பதவியிலிருந்து பொன் மொழியை விளக்கி உள்ளனர். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்தார்.