சேலம் மாவட்டம் மேட்டூர் குஞ்சாண்டியூர் அருகே உள்ள கோனூர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் வெங்கடாசலம். இவர் மேட்டூர் அருகே உள்ள திம்மம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி கடந்த 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் கோனூர் பகுதியில் உள்ள இவரது வீட்டின் அருகே திமுக நிர்வாகி வைரமணி என்பவர் குடியிருந்து வருகிறார். இவர்களில் இருவர் வீட்டிற்கும் அருகே பொதுவான இடம் உள்ளது. இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கடாசலத்தின் மகள் மனோரஞ்சிதம் அந்த இடத்தில் காய் தரும் மரம் மற்றும் பூச்செடிகளை வைத்து பராமரித்து வந்தார். இந்த நிலையில், திமுக நிர்வாகி வைரமணி அத்துமீறி நுழைந்து பராமரிக்கப்பட்டு இருந்த பூச்செடி மற்றும் காய் தரும் மரங்களை அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.



 


மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியரின் நிலத்தில் இரண்டு அடி வரை வைரமணி அபகரித்து உள்ளார். இதை தட்டிக்கேட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மகள் மனோரஞ்சிததிற்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் சாதிப்பெயரையும் கூடி திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கடாசலம் அவரது மகள் மனோரஞ்சிதம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 8 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திமுக நிர்வாகி வைரமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனே அருகில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உடனடியாக அவர்களிடம் விசாரணை நடத்தினர். 


இதுகுறித்து  ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கடாசலத்தின் மகள் மனோரஞ்சிதம் கூறும் பொழுது நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கோனூர் பகுதியில் எனது தாய், தந்தை உடன் இந்த வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டின் அருகே இருவீட்டாருக்கும் பொதுவான இடம் உள்ளது அந்த இடத்தில் காய் தரும் மரங்கள் மற்றும் பூக்களை வைத்து நாங்கள் பராமரித்து வந்த  நிலையில் கோனூர் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகியான வைரமணி அத்துமீறி நுழைந்து காய் தரும் மரங்களை வெட்டியதுடன் பூச்செடிகளை அப்புறப்படுத்தினர்.



எங்களுக்கு சொந்தமான 2 அடி நிலத்தையும் ஆக்கிரமித்து உள்ளார். இது குறித்து கேட்டதற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீங்கள் இப்பகுதியில் இருக்கக் கூடாது எனவும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது சம்பந்தமாக காவல்நிலையத்தில்   புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் இன்று நாங்கள் குடும்பத்துடன்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார். உடனடியாக திமுக நிர்வாகி வைரமணி மீது வழக்குப்பதிவு செய்து அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.