சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள தின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான சதீஷ் குமார். இவர் திருச்சியில் உள்ள எம்.ஆர்.எப் டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 6 வயதான ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், சதீஷ் குமார் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடியதில் சுமார் ரூ. 20 லட்சம் மேல் பணம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்றும் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது. 



தொடர்ந்து பணத்தை இழந்துவந்த இவர், ஒரு கட்டத்தில் ஆன்லைன் மூலம் கடன் கொடுக்கும், ஐந்து ஆன்லைன் கம்பெனிகளில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெற்ற கடனை ரூ. 15 லட்சம் வரை அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஆன்லைன் லோன் தரும் கம்பெனி நபர்கள், வாங்கிய லோன் பணத்தை விட பல மடங்கு அதிகமாக பணம் கட்டிய பிறகும், தினமும் சதீஷ் குமாரை போனில் அழைத்து பணம் கட்ட வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பணம் செலுத்தவில்லை என்றால் உன்னிடம் தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் உன்னை கேவலமாக சித்தரித்து வெளியிடுவோம் என மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சதீஷ் குமார், மனைவி மற்றும் மகனை அழைத்து கொண்டு ஓமலூர் வந்துள்ளார். 



பின்னர் ஓமலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். தொடர்ந்து கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக 60 தூக்க மாத்திரைகளை வாங்கி, அதை தனது மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்வதற்கு மாத்திரையை விழுங்கியுள்ளார். இதனால், மூன்று பேரும் விடுதியில் அறையிலேயே மயங்கி கிடந்துள்ளனர். இந்த நிலையில், வெளியே சென்றவர்களை காணவில்லை என்று உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர். இறுதியாக ஓமலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தேடிய போது, மூன்று பேரும் ஒரு அறையில் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்களை மீட்டு ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஓமலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீவட்டிபட்டு காவல்துறையினரும் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் தற்கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


 


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)