சேலம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்றது. அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வீரத்தோடும் விவேகத்தோடும் கூடியிருக்கிறீர்கள். வன்னியர் சங்க காலத்தில் சேலம் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று டாக்டர் ராமதாஸ் எழுச்சியை ஏற்படுத்தினார். இப்போது அதே அளவிற்கு மீண்டும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது சேலம் மாவட்டத்தில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த தேர்தலில் 11 தொகுதிகளிலும் பாமக வெற்றிபெற வேண்டும். அதற்கு என்னுடைய தம்பிகளும் தங்கைகளும் உதவி செய்வார்கள். இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் இல்லாத அளவிற்கு கோடிக்கணக்கான தங்கைகளும் தம்பிகளும் எனக்கு மட்டுமே உள்ளனர். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சியமைக்கும்.  நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக இல்லை.


35 வயதில் மத்திய அமைச்சராகி எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் போதும். 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தால் மட்டும் போதும். தமிழகம் முன்னேற்றம் அடைந்துவிடும்.


 


தமிழ்நாட்டில் 55 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சிக்கு வருகிறது. அடுத்து பாமக ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குறைந்தது 3 மாதம் உழைத்து நிதிநிலை அறிக்கையை உருவாக்குவார்கள். ஆனால், பாமக கடந்த 20 ஆண்டுகளாக மாதிரி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, நிஜமான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வோம். இது பாமக 2.0. கட்சிக்கு மறுசீரமைப்பு நடைபெற்று வருகிறது. 2026 நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். சிலருக்கு பதவிகள் கிடைத்தது. சிலருக்கு கிடைக்கவில்லை. டாக்டர் ராமதாஸூக்கு மட்டுமே கட்சியினர் உள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை பெற்று பணியாற்ற வேண்டும். நமக்குள் எந்த சர்ச்சையும் வரக்கூடாது.


நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் நம்மை யாராலும் தடுக்க முடியாது. சேலம் மாவட்டத்தில்தான் நான் படித்தேன். எல்லா இடமும் எனக்கு தெரியும். திராவிட மாடல் என திமுக சொல்கிறது. நான் சொல்வது பாட்டாளி மாடல். எல்லோருக்கும் முறையான கல்வி கொடுப்போம். ஒரு சொட்டு சாராயம் இருக்காது. விவசாயிகள் அவர்களுடைய விளைபொருளுக்கு விலை நிர்ணயிப்பார்கள். மேட்டூர் அணை உபரிநீர்த் திட்டம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.


தமிழகத்தில் கடவுளை வைத்தும், தமிழை வைத்தும் அரசியல் செய்கிறார்கள். ஆனால் பாமக மட்டுமே வளர்ச்சியை முன்வைத்து அரசியல் செய்கிறது. இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ், சேலம் ரெயில்வே கோட்டம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை செய்தது பாமகதான். மேட்டூர் அணை உபரிநீரை சேலத்திற்கு திருப்பிவிடச்சொல்லி,டாக்டர் ராமதாஸ் தலைமையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினார்கள். சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.


மொத்தம் 96 ஏரிகளில் 90 ஏரிகள் எடப்பாடி தொகுதியில் உள்ளது. எனக்கு மட்டும் அதிகாரம் கொடுத்தால் 2 ஆண்டுகளில் மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றுவேன்.


சேலம் மாவட்டத்தில், ஓமலூர் சரபங்கா, சேலம் திருமணிமுத்தாறு, ஆத்தூர் வசிஷ்ட நதிகள் சாக்கடையாக இருப்பதை மீட்டு மீண்டும் நதிநீர் ஓடச் செய்வோம். நிலத்தடி நீர்மட்டம் 50 அடிக்குள் இருக்கும் படி செய்வோம். ஆசை இருக்கிறது. ஆனால் அதிகாரம் இல்லை. நமக்கு வேண்டியது 20 விழுக்காடு. ஆனால், 10.5 விழுக்காடுதான் கிடைத்தது. ஆனால் அதையும் தடுத்து விட்டார்கள். மீண்டும் நிச்சயம் நமக்கான இடஒதுக்கீட்டு பெறுவோம். கிடைக்காவிட்டால் என்னுடைய தம்பிகள் விட மாட்டார்கள். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசும்போது, 45 நிமிடம் முழுமையாக விளக்கி சொல்லியுள்ளோம்.  வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. எனவே நிச்சயம் கிடைக்கும்.


 


மதுவை ஒழிப்பதற்காக போராடி வருகிறோம். பள்ளி செல்லும் மாணவர்கள் மது அருந்தும் நிலை உள்ளது. கல்லூரி மாணவர்களும் போதைக்கு அடிமையாக உள்ளனர். நாம் தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியாது. அரசின் வருமானத்திற்காக இளைஞர்களை சீரழிக்கக்கூடாது. பாமக மாடல் அடிப்படையில் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்காக போடப்படும். இதற்குப் பிறகு கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கப் போகிறேன். சேலம் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் பாமக கொடி பறக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தி மிகப் பெரிய இயக்கமாக மாற்ற வேண்டும்" என்றார்.


”மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பாமகவுக்கு ஆதரவான நிலை ஏற்பட்டுள்ளது. இதை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும், பாமக நிச்சயம் வெற்றி பெறும். எல்லா சமுதாயமும் நம் கட்சிக்குத் தேவை. சமூக நீதி என்பதுதான் பாமகவின் நோக்கமாக உள்ளது. அந்த அடிப்படையில் தான் நாம் இயங்கி வருகிறது. அதற்கு அடித்தளம் தான் 10.5 இடஒதுக்கீடு. கல்வி, வேலைவாய்ப்பிற்கு இந்த இட ஒதுக்கீடு உதவும். முதல்கட்டமாக 10.5 இட ஒதுக்கீடு நிச்சயம் சட்டமாக்கப்படும். நிச்சயம் பெற்றுத் தருவோம்” என்று கூறினார்.