சமீபத்தில் நடிகர் விமல் நடித்து வெளியாகிய விலங்கு வெப் சீரிஸ் பாணியில் கணவன், மனைவி இணைந்து நூதனமான முறையில் பணம் மற்றும் நகை பறிப்பு சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.


சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நகை கடை நடத்தி வருகிறார். இதனிடையே கருப்பூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு பகுதியில் வீரா என்கிற வீரபாண்டி மற்றும் அவரது மனைவி மோகனா வசித்து வருகின்றனர். மோகனா ராசிபுரத்தில் நகை கடை நடத்தி வரும் ராஜுவிடம் அவ்வப்போது நகை வாங்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடிக்கடி நகை வாங்கியதால் பழக்கம் ஏற்பட்டு ராஜு வீட்டிற்கு நகையை கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜுவை தொலைபேசியில் அழைத்த மோகனா 15 சவரன் நகை வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து மோகனா கேட்டது போல 15 சவரன் நகையை ராஜு எடுத்து வந்துள்ளார். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய ராஜூவை, மோகனா தனது இரு சக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மோகனா, ராஜுவிடம் நெருங்கி இருப்பது போன்று மோகனாவின் கணவர் வீரா வீட்டுக்கு வெளியே ஒளிந்திருந்து அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 



பின்னர் வீரா ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது என் மனைவியுடன் நீ நெருக்கமாக இருக்கும் புகைப்படம் எனது செல்போனில் உள்ளது. இது வெளியில் தெரிந்தால் எனது மானம் போய்விடும். உனது மதிப்பு மரியாதை மற்றும் அனைத்தும் போய்விடும் எனது மனைவியை ஆசை வார்த்தை கூறி உல்லாசத்திற்கு அழைத்து நெருக்கமாக இருந்தது தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்று கூறி மிரட்டி உள்ளனர். பயந்து போன நகைக்கடை அதிபர் ராஜு வெளியில் சொல்ல வேண்டாம் இதற்காக என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். 2 1/2 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் பெற்றுக் கொண்டு அவரை வெளியே அனுப்பி உள்ளனர். இதையடுத்து மோகனா மற்றும் தீரா இணைந்து நாடகம் ஆடியது ராஜுவிற்கு தெரிய வந்தது. உடனடியாக ராஜு அருகில் இருந்த சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். 



இதனை அறிந்த சூரமங்கலம் காவல்துறையினர் உடனடியாக கோட்டகவுண்டம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்துக்கும் வீரா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த மோகனாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து இரண்டரை சவரன் நகை மற்றும் பணத்தை கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள வீராவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திரைப்பட பாணியில் நகை கடை உரிமையாளரை ஏமாற்றி கணவன் மனைவி ஒன்றிணைந்து நகை மற்றும் பணத்தைப் பறித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.