Engineering Counselling: பொறியியல் மாணவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வை, உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தொடங்கி வைக்க உள்ளார்.


பொறியியல் கலந்தாய்வு:


மாநிலம் முழுவதும் அண்ணா பல்கலக்கழகத்தின் கீழ் 476 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.இ. மற்றும் பி.டெக்., ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் இடங்கள் உள்ளன. 2024-25-ம் கல்வியாண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களில், தகுதியான 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல்  ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையிலான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளது.


சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு:


6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின்கீழ் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முதலில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்குக் கலந்தாய்வு தொடங்குகிறது.


மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தகுதிவாய்ந்த தேர்வர்கள் (7.5% இட ஒதுக்கீட்டின்கீழ்)- 111. எனினும் இந்தப் பிரிவில் 664 இடங்கள் உள்ளதால் எல்லோருக்கும் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான தகுதியான தேர்வர்கள் (7.5% இட ஒதுக்கீட்டின்கீழ்)- 282 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 38 இடங்கள் உள்ளன. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 11 இடங்கள் உள்ள நிலையில், 11 மாணவர்கள் தகுதிவாய்ந்தவர்களாக உள்ளனர். நாளை வரை இந்தக் கலந்தாய்வு நடக்கிறது.


கலந்தாய்வு தேதிகள் என்னென்ன?


தொடர்ந்து பொதுப் பிரிவு சிறப்புப் பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளி, முன்னாள் படை வீரர், விளையாட்டு வீரர்) கலந்தாய்வு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தக் கலந்தாய்வுகள் அனைத்தும் இணைய வழியிலேயே நடக்கின்றன.


ஜூலை 29 முதல் பொதுக் கலந்தாய்வு


தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு ஜூலை 29 முதல் செப்டம்பர் 3 வரை நடக்கிறது. துணைக் கலந்தாய்வு செப். 6 முதல் 9ஆம் தேதி நடைபெற உள்ளன. எஸ்சி அருந்ததியர் மாணவர்களுக்கான காலியிடத்தை எஸ்சி மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்.10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதியோடு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவு பெறுகிறது.


அதிகரித்த விண்ணப்பங்கள்:


கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1,99,868 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10 அன்று வெளியானது.  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேலத்தைச் சேர்ந்த ரவணி என்னும் மாணவி, 199.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கோவை மாணவி கிருஷ்ணா அனூப் 198.50 கட் ஆஃப் உடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல வேலூர் மாணவர் சரவணன் 198.5 கட் ஆஃப் உடன் 3ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறார்.