சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்டம் ஓமதூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவதற்கு தேவையான பணிகளில் தொடர்ந்து ஈடுபடுமாறு வலியுறுத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் செம்மலை, சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக கொத்தடிமையாக செயல்பட்டு வருகிறார். அவரை அடையாளம் காட்டி, சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்ற அந்தஸ்தினை அதிமுகதான் வழங்கியது. ஆனால் அதை மறந்து எம்.ஜி.ஆரால் தீய சக்தி என்றழைக்கப்பட்ட திமுகவில் சேர்ந்த தற்போது கொத்தடிமை போல செயல்பட்டு வருகிறார். நான் தூங்கிக் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். தூங்காமல் விழிப்புணர்வாக எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருப்பதால்தான் அவர் எங்களை விமர்சனம் செய்து வருகிறார். அதிமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. அண்மையில் 2 இடங்களில் புகார் கொடுக்க வந்த பெண்களிடம் காவல்துறையைச் சேர்ந்தவர்களே அத்துமீறி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (2 நிகழ்வுகளையும் வீடியோ காண்பித்தார்) அந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாசமாக்கப்பட்டு விட்டது. இது தெரியாமல், அரசும், காவல்துறையும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்துறை அமைச்சர் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறார். திமுக ஆட்சியில் பொதுமக்கள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. நாட்டில் நிலவும் பிரச்சினைகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் மீது வீணாக பழி சொல்கின்றனர்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது தமிழகத்தின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தோம். அந்த கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு என எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய உள்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டன. ஆனால் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்களின் பிரச்சினைகள் ஆட்சியாளர்களின் காதில் விழுவது இல்லை. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரச்சினையில் கவனம் இன்றி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசு விழித்துக் கொண்டு மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்காக பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலம் இருக்கிறது. அதற்குள்ளாக இன்னும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும் என்றார்.
தேமுதிக பொருளாளர் சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உறுதி அளித்திருந்ததாக கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து இன்னாரு நாளில் விரிவாக பதிலளிப்பதாக தெரிவித்தார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 லட்சம் அரசுப் பணியிடங்கள், 2 லட்சம் அரசு சார்பு பணியிடங்களை நிரப்புவதாக சொன்ன திமுக, ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் சுமார் 78 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது. மேலும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவுட் சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தற்போது அவுட் சோர்சிங் முறையில் பணியிடங்களை நிரப்புகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்ற நிலையில் காலி பணியிடங்கள் மேலும் அதிகரித்து விட்டது. பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை பணியாளர்கள் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என நாங்கள் நீண்ட நாட்களாக கோரி வருகிறோம். பிரதான எதிர்க்கட்சித் தலைவரான என்னுடைய பேச்சு நேரலையில் ஒளிபரப்பபடுவதில்லை. பேச்சு முழுமையாக ஒளிபரப்ப பட்டால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்திற்கு போய்விடும். இதைபோன்றே, முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களையும் சந்திப்பதே இல்லை. செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்தாலும், கேள்விகள் முன்கூட்டியே அளிக்கப்பட்டு, அந்த கேள்விகளை கேட்க மட்டுமே செய்தியாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார். மக்கள் பிரச்சினைகளை செய்தியாளர்கள் கேட்டுவிட்டால் பதிலளிக்க முடியாமல் போய்விடும் என்பதால் முதலமைச்சர் பத்திரிகையாளர்களை தவிர்க்கிறார் என்றார்.
பகல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் இந்திய மக்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. அதற்கு பதிலடியாக தீவிரவாத முகாம்களை கண்டறிந்த இந்திய ராணுவமும் முப்படைகளும் நடத்திய தாக்குதல் பாராட்டுக்குரியது. பயங்கரவாதத்தை முறியடிக்கும் விதமாக ராணுவம் எடுத்துள்ள முதல் கட்ட பணிக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 1000 பேருடன் ஆயுதம் ஏந்தி பாகிஸ்தானுக்கு எதிராக போராடத் தயார் என கூறியது குறித்து கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நாட்டின் மீதான பற்றில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார் என்று கூறினார்.