தருமபுரி அருகே 17 வயதான கல்லூரி மாணவி ஒருவருக்கு சகோதரர் உறவு முறை கொண்ட வாலிபர் சஞ்சய் என்பவர், காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். இதனை கல்லூரி மாணவி பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், கல்லூரி செல்லும் போது, மாணவியிடம் பேசுவதும், பின் தொடருவதுமாக இருந்துள்ளார். இதற்கு கல்லூரி மாணவி முகம் சுளிப்பதால், காதலிக்கவில்லை என்றால், வீட்டில் தனியாக இருக்கும் போது, வீட்டிற்கே வருவேன், பாலியல் துன்புறுத்தல் கொடுப்பேன் என்றும், முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.



 

இதனை அடுத்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாணவியின் பெற்றோர், சஞ்சய்யை அழைத்து எச்சரித்தததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை, மாணவி கல்லூரிக்கு செல்ல வந்தபோது, பின் தொடர்ந்து வந்து, காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு கொடுத்துள்ளார். ஆனால் அதை கண்டு கொள்ளாததால், பேருந்தில் ஏறும்போது, துப்பட்டாவை பிடித்து இழுத்து கீழே தள்ளி உள்ளார். இதில் கல்லூரி மாணவி, கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனை தொடரந்து தருமபுரி சைல்டு லைன் அமைப்பிற்கு மாணவி தகவல் தெரிவித்துள்ளார். 

 



 

தொடர்ந்து வந்த சைல்டு லைன் அமைப்பினர் உதவியுடன், தருமபுரி அனைத்து மகளிர் காவல் காவல்நிலையத்தில் மாணவி, சஞ்சய் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில், கல்லூரி மாணவியை மிரட்டி, தொந்தரவு செய்த சஞ்சய் (25) மீது போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி அருகே அண்ணன் உறவுமுறை கொண்ட வாலிபர், கல்லூரி மாணவியை காதலிக்கு வற்புறுத்தி, மிரட்டி வந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுததியுள்ளது.