தருமபுரி அருகே கால்நடைகளுக்கு 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் மற்றும் மேய்ச்சல் தரையை மேம்படுத்திட தீவன மரக் கன்றுகள் நடும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

 



தருமபுரி மாவட்டத்தில் 3,84,871 பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் 4 மாதத்திற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மொத்தம் 3 லட்சத்து 46 ஆயிரம் டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், 2 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை பாடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.

 

இன்று முதல் 28.11.2021 முடிய 3 வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகின்றது. இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கபட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மொத்தம் 3.46 இலட்சம் டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. எனவே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாத்திட கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்களுக்கு அழைத்து சென்று கட்டாயம் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். 

 

மேலும் விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி வருகின்ற 29.11.2021 முதல் 8.12.2021 முடிய கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்போர், இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்துச் சென்று கட்டாயம் கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.

 



 

இதனை தொடர்ந்து பாடி அரசு மாதிரி பள்ளியின் அருகில் மேய்ச்சல் தரையை மேம்படுத்திட தீவன மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க, மரக்கன்று நடும் பணியினையும் மாவட்ட  ஆட்சியர் ச.திவ்யதர்சினி தொடங்கி வைத்தார். இங்கு 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள மேய்ச்சல் நிலத்தினை கால்நடைகள் மேய்வதற்கு உகந்த நிலமாக புதுப்பித்து அவற்றில் 6.68 லட்சம் செலவினத்தில் தீவன மரக்கன்றுகள் மற்றும் தீவனப்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் மூலம் வரப்பு அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், மரக்கன்றுகள் நட குழிகள் எடுத்தல் மற்றும் தொடர் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இத்திட்டத்தில் சூபாபுல், வேம்பு, கல்யாண முருங்கை, சீமை அகத்தி, முருங்கை, வெல்வேல், அகத்தி, கொடுக்காப்புளி, பூவரசு, இலவம்பஞ்சு, புங்கன் உள்ளிட்ட மரவகைகள் 3,200 எண்ணிக்கையில் தகுந்த இடைவெளியில் நடப்படுகின்றன. முயல் மசால் மற்றும் கொழுக்கட்டைப்புல் ஆகியவையும் வளர்க்கப்பட்டு கால்நடைகளின் மேய்ச்சலுக்கு உபயோகப்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர் வைத்திநாதன், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பி.சுப்ரமணி, மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.