தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டத்திற்கு, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே போத்தாபுரம் பகுதியை சேர்ந்த சிவகாமி(46) என்பவர் மனு கொடுக்க வந்தார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலின் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையறிந்த காவல் துறையினர் அவரை பாதுகாப்பாக காப்பாற்றினர். சிவகாமி தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகில் உள்ள, நில உரிமையாளர்களுக்கும் பாதை பிரச்சனை கடந்த ஆறு மாதகமாக உள்ள நிலையில், காரிமங்கமலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை விசாரிக்க அங்கு பணி செய்யும் உதவி காவல் ஆய்வாளர் கண்ணம்மா என்பவர் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றும் எதிர்தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டும் புகார் பெறபட்ட சான்றிதழ் (சி.எஸ்.ஆர்) வழங்காமல் மிரட்டியுள்ளார். அதனால் தனக்கு உரிய நீதி வேண்டும் என்றும், சிறப்பு உதவி ஆய்வாளரை கண்டித்து, சிவகாமி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணென்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். 

 


 

இதேபோல்  தருமபுரியை அடுத்த சவுளுப்பட்டியை சேர்ந்த சாரா என்பவர் தனது 2.5 ஏக்கர் விவசாய நிலத்தை மதிக்கோன்பாளையத்தை சேர்ந்த ஜீவா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, தன்னை மிரட்டி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தனது நில பிரச்சனையை தீர்த்து வைக்க கோரியும், தன்னை ஏமாற்றி வரும் ஜீவா மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி, சாரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.



 

அப்பொழுது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றினர். இந்நிலையில் தனது நிலை பிரச்சினையை தீர்த்து வைக்க கோரி தீக்குளிக்க வந்ததாக காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருவேறு நிலப் பிரச்சினை தொடர்பாக  தீக்குளிக்க முயற்சி செய்த சிவகாமி மற்றும் சாரா இருவரையும் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் நிலப் பிரச்சனை தொடர்பாக காவல் துறையினரை கண்டித்து தீக்குளிக்க முயற்சி செய்து சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.