விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாரயம் அருந்தி 22 உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் அதிரடி பேட்டையில் இறங்கி கள்ளச்சாராயத்தை ஒழிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். சேலம் மாவட்டம் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளுக்கு லாரி ட்யூபுகள் மூலம் கடத்தப்பட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் ஆத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கல்வராயன் மலை அடிவாரப்பகுதியில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தலைவாசல் அருகே உள்ள மணி விழுந்தான் ஊராட்சிக்குட்பட்ட வசந்தபுரம் பகுதியில் ஆத்தூர் டி.எஸ்.பி., நாகராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 



அப்போது விவசாய நிலத்தின் அருகில் லாரி ட்யூப் களில் சாராயம் பதுக்க வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விவசாய நிலத்தின் அருகில் மூன்று அடி பள்ளம் தோண்டப்பட்டு 28 லாரி டியூப்களில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றை தோண்டி எடுத்து பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் சேர்ந்து மனோகரன் என்கின்ற பெண்டு மனோகரன், அவரது மனைவி சந்திரா, மகன் மணிகண்டன், தனலட்சுமி உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக மண்ணிற்கடியில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக மனோகரன், அவரது மனைவி சந்திரா, மகன் மணிகண்டன், மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, சுதன் (எ) சுதாகர், சூர்யா ஆகிய ஆறு பேர் மீதுவழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆறு பேரையும் தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.