திருவாரூர் அருகே வாய்க்கால் பாலம் இடிந்து வருவதால் மேலகூத்தங்குடி பகுதி துண்டிக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆபத்து காலத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. திருவாரூர் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் மேலகூத்தங்குடி கிராமம் உள்ளது. ஆனால் இந்த கிராம் பெருங்குடி ஊராட்சி அருகில் காட்டாற்றின் கரை எதிர் திசையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காட்டாற்றில் தற்காலிகமாக மூங்கில் மரத்தினால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலத்தினை கடந்து வயல்கரை சாலையை பயன்படுத்தி தான் பெருங்குடி ஊராட்சிக்கு செல்ல வேண்டும். தற்போது இந்த மரபாலம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் ரேசன் பொருட்கள் வாங்க இந்த வழிபாதையை பயன்படுத்தி தான் கிழப்படுகை கிராமத்தில் உள்ள ரேசன் கடைக்கு தான் செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வரும் நிலையில் மழை காலங்களில் சேறு சகதியுமான மண் சாலையை கடந்து செல்ல முடியாத நிலையில் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். 



 

கிராம நிர்வாகம் அலுவலம், ரேசன் பொருட்கள் வாங்க ரேசன் கடை என அனைத்திற்கும் பெருங்குடி ஊராட்சி கீழப்படுகை தான் செல்ல வேண்டும். இவர்களுக்கு சாலை வழிபாதை என்பது மேல கூத்தங்குடியில் இருந்து கீழ கூத்தங்குடி, புலிவலம் வழியாக தான் சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றி பெருங்குடிக்கு செல்ல வேண்டும். இதனால் காட்டாற்றில் நிரந்த பாலம் கட்டி வயல்வழி சாலையை விரிவுப்படுத்தி தார் சாலையாக அமைந்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த வழிபாதைக்காக இடத்தை கையகப்படுத்துவதில் சில சிக்கல் நிலவி வருகிறது. இதானல் இந்த பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் மேல கூத்தங்குடி கிராம மக்கள் எந்த தேவை என்றாலும் ஒரு வழி சாலை பாதையை பயன்படுத்தி கீழ கூத்தங்குடி, புலிவலம் வழியாக திருவாரூர் வர வேண்டும். இதில் மேல கூத்தங்குடி-கீழ கூத்தங்குடி இணைக்கும் இடத்தில் காட்டாற்றில் இருந்து பிரிவு பாசன வாய்க்கால் பாலம் கடந்து செல்ல வேண்டும். இந்த பாலம் தற்போது மிகவும் பழுதடைந்து இடிந்து பெரிய பள்ளமாக காட்சியளிக்கிறது. காட்டாற்றில் அதிகமாக தண்ணீர் செல்வதால் இந்த பாலமானது தொடர்ந்து இடிந்து வருகிறது. இதனால் இந்த பாலத்தினை வாகனங்கள் கடந்து செல்ல முடியாத ஏற்பட்டுள்ளது. 



 

அவசர ஆபத்து காலத்தில் ஆம்புலன்ஸ் கூட மேல கூத்தங்குடி கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. மேல கூத்தங்குடியுடன் வழிபாதை முடிவடையும் நிலையில் ஒரு வழிபாதையும் துண்டிபாகும் அபாய நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மேல கூத்தங்குடி பகுதியில் ஒ.என்.ஜி.சி. சொந்தமான எண்ணை கிணறு அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக செயல்படும் இந்த கிணற்றில் இருந்து எண்ணை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த இடத்திற்கு ஒ.என்.ஜி.சிக்கு சொந்த கனகர வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். ஆனாலும் இந்த வழி கப்பி சாலையை தார்சாலையாக சீரமைக்க வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கை எடுக்க வில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே மேல கூத்தங்குடி பகுதி ஒரு வழிபாதையில் பாலம் பழுதடைந்துள்ளதை உடனியாக சீரமைத்திட வேண்டும். காட்டாற்றின் நிரந்த பாலம் அமைத்து, வாகனங்கள் செல்லும் வகையில் வயல்வழி சாலையை அமைத்து தர வேண்டும் என  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்