பாஜக வெற்றி:


90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியானது. 3வது முறையாக ஆட்சியை பிடித்து விட வேண்டும் என தீவிரம் காட்டி செயல்பட்டு வந்த, பாஜக பெரும்பான்மை இடங்களில் ( தற்போது வரை 48 தொகுதிகள் , காங்கிரஸ் 37 தொகுதிகள் , மற்றவை - 5 ) வெற்றி பெற்று பெற்று,  மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று விட்டது. ஹரியானா மாநிலத்தில், தொடர்ந்து 3வது முறையாக ஒரு கட்சி ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறையாகவும் பார்க்கப்படுகிறது. 


அதிர்ச்சியடைந்த காங்கிரஸ்:


அதே நேரத்தில் இந்த முறை ஹரியானாவை தங்கள் வசம் ஆக்க வேண்டும் என ஆர்வம் காட்டிய காங்கிரசுக்கு, முடிவுகளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் களமானது ஆரம்பம் முதலே காங்கிரசுக்கு சாதகமாக அமைந்தது என்றே சொல்லலாம். மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்த போது, அதை எதிர்த்து போராடியவர்களில் ஹரியானா விவசாயிகளின் பங்கு அதிகம். அதனால் விவசாயிகளின் அதிருப்தி, காங்கிரசுக்கு வாக்குகளாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. 
மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஹரியானா தேர்தலில் பாஜகவுக்கு சறுக்கலாக உள்ளதாக பேசப்பட்டது. மேலும் அக்னி வீர் திட்டம் உள்ளிட்டவைகளும் பாஜகவுக்கு எதிராக உள்ளதாகவும் பார்க்கப்பட்ட நிலையில், அது காங்கிரசுக்கு முழுமையாக வாக்குகளாக மாறவில்லை என்றே பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுட்த்திக் கொள்ளவில்லை என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் காங்கிரஸுக்கு சாதகமாகவே அமைந்தன. இந்நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், முன்னிலை நிலவரம் மாறி, மாறி வந்தது.  காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வந்த நேரத்தில், அடுத்த சில மணி நேரங்களிலேயே நிலவரம் மாறி பாஜக முன்னிலை வகித்து இறுதியில் வெற்றி பெற்றுள்ளது. 


காங்கிரஸ் தோல்வி ஏன்:


1. உட்கட்சி பூசல்: முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் ஹூடா , குமாரி செல்ஜா ஆகிய மூத்த தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால், காங்கிரஸ் வாக்குகள் பிரிந்ததாக பார்க்கப்படுகிறது.
சுமார் 25 சதவிகிதம் இருக்கும் ஜாட் சமுதாயத்தைச் சேர்ந்த பூபிந்தர்  ஹுடாவை முன்னிறுத்தி , ஹூடாவை சமுதாய மக்களை பெற காங்கிரஸ் முயற்சித்ததாக கூறப்பட்டது. மேலும், குமார் செல்ஜாவை , பூபிந்தர் ஓரங்கட்டியாதகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன, இதனால்  தலித் சமுதாய மக்களின் அடையாளமாக பார்க்கப்பட்ட குமார் செல்ஜா ஆதரவு வாக்குகள், பிரிந்து பாஜகவின் பக்கம் சென்றிருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 


2. மேலும் , பாஜகவின் ஆட்சியானது மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹரியானா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டரை மாற்றி நயாப் சிங்  சைனியை முதல்வராக பாஜக மாற்றியது. இது மக்கள் மத்தியில் பாஜக மீதான எதிர்ப்பை சற்று தணித்ததாக பார்க்கப்படுகிறது. மேலும்  சைனி , பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, மக்களை சந்தித்தார். அவருடன் பல மத்திய அமைச்சர்களும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக பங்காற்றியதும் பாஜகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.